"டுபாக்கூர்" ஆசிரியர்களுக்கு வேட்டு வைக்க வந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணி!
நெல்லை: தமிழகத்தில் ஆசிரியர் சான்றிதழ் சரி பார்ப்பு நடந்து வருவதால் போலி ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளிகளில் பலர் ஆசிரியர்களாக பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது. கடந்த 1991 பின்னர் பணியில் சேர்ந்த பலரது சான்றிதழ்களை சரிவர ஆய்வு செய்யாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், நாமக்கல் ஆகிய பகுதிகளில் மேலும் பல போலி ஆசிரியர்கள் பணியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 4ம் தேதி 40 ஆசிரியர்கள் திடீரென விடுப்பு எடுத்தனர். நேற்று 100க்கும் மேற்பட்டோர் திடீரென பணிக்கு வரவில்லை. இந்த விவகாரம் கல்வி துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
100க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் சொல்லி வைத்தது போல் தலைமறைவாக இருப்பதால் சந்தேகம் வலுத்துள்ளது. பலர் தங்களது செல்போன் சுவிட்டை ஆப் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தங்களை சட்டரீதியாக பாதுகாத்து கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழக கல்வி துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.