தைப்பூசம்: முருகனின் அறுபடை வீடுகளில் கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்
பழனி: தைப்பூசத் திருவிழா பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்கியுள்ள நிலையில் சிவ ஆலயங்களும் தைப் பூச திருவிழாவிற்கு தயாராகி வருகின்றன.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
பழனியில் தைப்பூசத் திருவிழா பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வருகிறார்கள். இவ்வாறு பாத யாத்திரை செல்வதால் பக்தர்களுக்கு ஆன்ம பலமும், உடல் நலமும் ஒருங்கே பெருகுகிறது. மன உளைச்சல் அகன்று உள்ளத்தில் உற்சாகம் பிறக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பினாங்கு, செய்கோன், மொரீஷியஸ் முதலிய வெளிநாடுகளிலும் தைப்பூசத் திருவிழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
பழனியில் தைப்பூசம்
பாதயாத்திரைக்கு பெயர் பெற்ற தைப்பூச திருவிழா தொடக்கமாக பழநியில் ஊர்க் கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகியம்மன் கோயி லில் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி னார். இங்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து நேற்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. மயில், வேல், சேவல் உருவங்கள் பொறித்த மஞ்சள் நிற கொடி கோயிலின் உட்புறம் உள்ள கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டது.
தைப்பூச தேரோட்டம்
இரவு பெரிய நாயகியம்மன் கோயிலை சுற்றி யுள்ள நான்குரத வீதிகளில் வள்ளி தேவசேனா சமேத முத்துக் குமாரசுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சிகள் நடை பெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் ஜனவரி23ம் தேதி இரவு 7.30 மணிக்கும், தேரோட்டம் ஜனவரி 24ம் தேதி மாலை 4.25 மணிக்கும் நடைபெற உள்ளன.
மருதமலை முருகன்
கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. முருகனின் 7வது படைவீடு என்று பக்தர்களால் போற்றப்படும் இந்த கோவிலில் தைப்பூச திருவிழா நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் நடைதிறக்கப்பட்டு கோபூஜை நடைபெற்றது.
மகா அபிஷேகம்
இதைத்தொடர்ந்து மூலவருக்கு வாசனை திரவியங்களால் மகாஅபிஷேகம் செய்யப்பட்டு, காலை 5.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சிஅளித்த மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், விநாயகர் பூஜை, புண்யாகம், மண்எடுத்தல், மருதாசல மூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திக ளுக்கு கங்கணம் கட்டப்பட்டது. வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி, விநாயகர், வீரபாகுதேவர், சூலத்தேவருடன் கற்பகத்தரு வாகனத்தில் கோவிலைச்சுற்றி வீதிஉலா வந்து கொடிமரம் முன் எழுந்தருளினார்.
கொடியேற்றம்
காலை 6.30 மணிக்கு சேவல்சின்னம் பொறித்த கிருத்திகை கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, 7.15 மணிக்கு கொடிமரத்தில் சேவற்கொடி ஏற்றப்பட்டது. அப்போது, ஆதிவாசி மக்கள் உருமி, கொம்பு, பறை, மேள-தாள வாத்தியங்களை இசைத்து எழுப்பினார். பின்னர் மகாதீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து மூலஸ்தான மண்டபத்தில் வேள்வி பூஜை தொடங்கியது. அதைத்தொடர்ந்து சுப்பிரமணியசுவாமி வள்ளி-தெய்வானையோடு கோவிலைச்சுற்றி வீதி உலா வந்தார்.