பல குழுக்களாகப் பிரிந்து அதிமுகவை பிரித்து மேய்வது யார் மிஸ்டர் தம்பிதுரை?
அதிமுகவில் குடும்ப அரசியல் இல்லை என அப்பட்டமாக புளுகியுள்ளார் தம்பிதுரை.
சென்னை: அதிமுகவில் திமுக போல் குடும்ப அரசியல் இல்லவே இல்லை என சத்தியம் செய்யாத குறையாக அப்பட்டமாக புளுகியுள்ளார் தம்பிதுரை. அப்படியானால் சசிகலா பாலிடிக்ஸ், தம்பி திவாகரன் பாலிடிக்ஸ், அக்கா மகன் தினகரன் பாலிடிக்ஸ், அண்ணி இளவரசி குடும்ப பாலிடிக்ஸ், சைடில் கணவர் நடராஜன் பாலிடிக்ஸ் இவங்கல்லாம் ஒரே குடும்பம் கிடையாதா மிஸ்டர் தம்பிதுரை?
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தின் தீவிர விசுவாசியாகியுள்ளார் தம்பிதுரை. இவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்கு குற்றாவாளி சசிகலாவையும் அடிக்கடி சந்தித்து தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
எந்த இடத்திலும் சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் விட்டுக்கொடுக்காமல் பேசி வருகிறார் தம்பிதுரை. இதனால் எடப்பாடி தரப்பின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்.
இவர்களெல்லாம் யார்?
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவைப் போல் அதிமுகவில் குடும்ப அரசியல் இல்லை என நா கூசாமாக கூறியுள்ளார். அப்படியால் சசிகலா, தினகரன், திவாகரன், இளவரசி, நடராஜன் இவர்களெல்லாம் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தினகரன் நியமனம்?
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா தனது சிறைவாசத்துக்கு முன்பு டிடிவி தினரகனை துணை பொதுச்செயலாளராக நியமித்து கட்சியை அவரிடம் பொறுப்பாக ஒப்படைத்துப் போனாரே அது குடும்ப அரசியல் இல்லையா மிஸ்டர் தம்பிதுரை?
வெங்கடேஷ் சேர்ப்பு?
ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தனது அண்ணன் மகனான டாக்டர் வெங்கடேஷை சசிகலா கட்சியில் சேர்த்தாரே அது என்ன அரசியல் என்றும் தம்பிதுரை விளக்கவேண்டும். தினகரனும், வெங்கடேஷும் சசிகலா குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் இல்லையா?
திவாகரன் பேசியது நினைவில்லையா?
ஒரு தரப்பு எம்எல்ஏக்களை தன்பக்கம் இழுத்து தன ஆவர்த்தனம் செய்து வரும் திவாகரன் சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர் இல்லையா? நாங்கள் ஏகே 47 ரக துப்பாக்கியைக் கொண்டு ஜெயலலிதாவை பாதுகாத்தோம், அதிமுகவை பாதுகாத்தது நாங்கள் தான் கட்சி எங்களுக்குதான் என்றெல்லாம் திவாகரன் பேசியது தம்பிதுரைக்கு நினைவில்லையா?
யாருடைய கட்டுப்பாட்டில்?
டிடிவி தினகரன் இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது கட்சி திவாகரன் கட்டுப்பாட்டில் உள்ளது என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி குற்றம்சாட்டியதை தம்பிதுரையால் மறுக்க முடியுமா?
குடும்ப அரசியல் செய்வோம்
ஜெயலலிதாவால் துரோகி என குற்றம்சாட்டப்பட்டு விரட்டப்பட்டவர் நடராஜன். இப்போது எல்லாவற்றுக்கும் மறைமுகமாக அடித்தளமாக செயல்பட்டு வரும் அவர் யார் என தம்பிதுரைக்கு தெரியாதா? கடந்த ஜனவரி மாதம் நிகழ்ச்சியொன்றில் பேசிய சசிகலாவின் கணவரான நடராஜன் நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் என பகிரங்கமாக அறிவித்தார். இது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.
ஏன் பூசி மொழுகுகிறார்?
நடராஜனே குடும்ப அரசியல் செய்வோம் என அறிவித்து அதனை செவ்வனே செயல்படுத்தி வரும் நிலையில் தம்பிதுரை ஏன் அதனை பூசி மொழுகுகிறார்? யாருக்காக இப்படி வரிந்துக்கட்டிக்கொண்டு பேசுகிறார்?