வருமான வரித்துறை மீண்டும் சம்மன்.. இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் விஜயபாஸ்கர்!
சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இன்று காலை விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆர்கே நகரில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், மாஜி எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலை கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.
அதில் விஜயபாஸ்கர் அலுவலகம், வீடு, எம்.எல்.ஏ விடுதி, சொந்த ஊரில் உள்ள வீடு, கல்குவாரி அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்களில் கடந்த ஏப்ரல் மாதம் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல், கீதாலட்சுமி வீட்டில் 27 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
வருமானவரி சோதனையின்போது, விஜயபாஸ்கரின் வீடுகளில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவர் மீது வழக்கு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை. விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கும் வருமானவரித்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
இதனிடையே புதுக்கோட்டையில் அவரது தந்தை சின்னத்தம்பி மற்றும் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. விஜயபாஸ்கருக்கு சொந்தமான புதுக்கோட்டை அருகே அமைந்துள்ள கல்குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 4 மடங்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது.
கல்குவாரியில் சிக்கிய ஆவணங்கள் குறித்து விஜயபாஸ்கர் தந்தையிடம் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் கடந்த 14ம் தேதியன்று சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில், விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதில் இன்று காலை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சோதனையின் போது கைப்பற்றபட்ட ஆவணங்கள் அடிப்படையில் மீண்டும் விசாரணை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.