கூட்டணி ஆட்சி கோட்பாடுக்காக தேர்தல் புறக்கணிப்புக்கும் தயார்: திருமாவளவன்
சென்னை: கூட்டணி ஆட்சிக்காக தேர்தலை புறக்கணிக்கவும் தயார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் "தமிழகத்தில் கூட்டணி ஆட்சி" என்னும் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடந்தது. கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார். கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ம.தி.மு.க. பொருளாளர் மாசிலாமணி ஆகியோர் கலந்து கொண்டு கூட்டணி ஆட்சி பற்றி உரையாற்றினார்கள்.
திருமாவளவன் பேசியதாவது: ஏதோ ஒர் குறிப்பிட்ட அணிக்கு எதிராக இந்த முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. இது வரலாற்று தேவை. இன்றைய தேர்தல் முறையில் விளிம்புநிலை சமூகம் அதிகாரம் பெற முடியாது. அவர்கள் அதிகாரம் பெறுவதற்கு கூட்டணி ஆட்சி என்கிற நிலை ஒரு சாதாரண உக்திதான்.
எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு துணிச்சலான முடிவை எடுப்பது அவசியமாகும். இங்குள்ள கட்சிகளுடன் தேர்தல் களத்திலும் இணைந்து நிற்க தயார் அதில் ஆட்சேபணை இல்லை. இது ஒரு கோட்பாடு. அதில் வெற்றி பெறும் முயற்சியில் தோல்விகள் கிடைக்கலாம். அதற்காக கலங்கி நின்றுவிட கூடாது. கூட்டணி ஆட்சியை வலியுறுத்தும் முயற்சிக்காக, வரும் பொதுத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாமல் ஒதுங்கவும் தயாராக உள்ளது என்றார்.