பள்ளி முள்வேலியில் மின்கம்பி விழுந்தது... கதவைத் தொட்ட மாணவி மின்சாரம் தாக்கி படுகாயம்
சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பள்ளிக் கூடத்தைச் சுற்றிலும் கட்டப்பட்டிருந்த முள்வேலியில் மின்சாரக் கம்பி விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் மாணவி ஒருவர் படுகாயமடைந்தார்.
கல்லூர் ஊராட்சியை சேர்ந்த தொத்தார்கோட்டை கிராமத்தில் சுமார் 23 குழந்தைகளுடன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இன்று இதன் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் இணைக்கப்பட்டு இருந்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் இந்தபள்ளியை சுற்றி அமைக்கப்பட்டிருந்த முள்வேலி முழுவதும் மற்றும் இரும்பு கதவில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
அப்போது பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த 5-ம் வகுப்பு மாணவி காவ்யா (10) பள்ளியின் நுழைவு வாசல் இரும்பு கதவை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் மாணவி கீழே விழுந்தார். மயக்கம் அடைந்த மாணவியை உடனே பள்ளி ஆசிரியர்கள் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றுள்ளனர். அங்கு அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்த திருவாடானை உதவிக்கல்வி அலுவலர் வாசுகி, மற்றும் ஏராளமான பள்ளிகளின் ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.
இந்த விவகாரம் குறித்து தலைமை ஆசிரியர் கூறுகையில், "பள்ளியின் சார்பில் பழுதடைந்த மின்கம்பங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை மாற்ற பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால் மாற்றப்படவில்லை. இதனால் மிகுந்த அச்சத்துடன் இருந்து வந்ததோம். இந்தநிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என ஊராட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பினர், மின்துறை உதவிபொறியாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் பல முறை கோரிக்கை விடுத்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications