திருவள்ளூரில் தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம் - பேரம்பாக்கம் சாலை துண்டிப்பு... மக்கள் அவதி
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள தரைப்பாலத்தின் மீது மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் ஆற்றை கடக்க முடியாமல் மாற்றுப் பாதையில் சென்று வருகிறார்கள்.
பேரம்பாக்கம்-இருளஞ்சேரி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தின் ஒரு பகுதி கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்து செல்லப்பட்டதால் சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பேரம்பாக்கத்தில் இருந்து இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேரம்பாக்கம் மேம்பாலம் வழியாக சுற்றி சென்றனர். தொடர் மழை காரணமாக கூவம் ஆற்றில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் அதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.
பேரம்பாக்கத்தில் இருந்து மப்பேடு செல்லும் வழியில் கொண்டஞ்சேரியில் உள்ள தரைப்பாலம், மப்பேடு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம், போளிவாக்கம் அத்திக்குளம் பகுதியில் உள்ள தரைப்பாலம் என பல இடங்களில் தரைப்பாலங்களை மூழ்கடித்த நிலையில் வெள்ளம் சீறிப்பாய்ந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
திருவள்ளூர் அம்சா நகரில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், வெள்ளத்தால் பாதித்த பகுதியை பார்வையிட சென்றார்.
அப்போது சாக்கடையில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய ஒரு முதியவரை கண்ட கலெக்டர், காரில் இருந்து இறங்கி வந்து அதிகாரிகள் உதவியுடன் முதியவரை மீட்டார். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அங்குள்ள தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் அவரை ஒப்படைக்க உத்தரவிட்டார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தின் அருகே உள்ள ஓடையில் சுமார் 3 அடி உயரத்துக்கு மழைநீர் செல்வதால் அப்பகுதி வழியாக செல்லும் பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications