திருவாரூர், திருப்பரங்குன்றம்.. தமிழக அரசியலை நிர்ணயிக்கும் 2 தொகுதிகள்.. நவம்பரில் இடைத்தேர்தலா?
திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு வரும் நவம்பரில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
சென்னை: திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு வரும் நவம்பரில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
தமிழக சட்டசபையின் மொத்த பலம் 234 ஆகும். தற்போது அதிமுகவிற்கு 116 உறுப்பினர்கள் உள்ளனர். திமுகவிற்கு 88, காங்கிரஸ் கட்சிக்கு 8 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 மற்றும் சுயேச்சை வேட்பாளருக்கு 1 என்றுள்ளது.
18 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதி
அதிமுக எம்எல்ஏ டிகே போஸ் மறைவு காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதி மிகவும் முக்கியமான தொகுதியாகும். 8 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தொகுதி தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
திருவாரூர் தொகுதி
கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, திமுக தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதியில் எப்படியாவது வெற்றிபெறவேண்டும் என்று திமுக நினைத்துள்ளது.
தெலுங்கானாவுடன் தேர்தல்
இந்த நிலையில் வரும் நவம்பரில் இந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வரும் நவம்பரில் கலைக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதோடு சேர்த்து இந்த தேர்தலையும் நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.
ஒப்புதல் வழங்கிவிட்டதா?
அதோடு இதுகுறித்த வரைவு அறிக்கை ஏற்கனவே தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. தமிழக அரசும் நவம்பர் மாதம் தேர்தலை நடத்த ஒப்புக்கொண்டு உள்ளதாக தகவல்கள் வருகிறது. இதனால் நவம்பரில் தமிழகம் மிக முக்கியமான திருப்பத்தை சந்திக்க உள்ளது என்று கூறலாம்.