மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் வண்ணமயமாக நடந்த தெப்பதிருவிழா
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தை தெப்ப உற்சவத்தை முன்னிட்டு மாரியம்மன் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன், சுவாமி எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் சப்பரத்தை வடம் பிடித்து இழுத்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமியும், அம்மனும் தினமும் காலை, இரவு என இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர் களுக்கு காட்சி அளித்தனர்.

விழாவின் 11ஆம் நாளான திங்கட்கிழமையன்று சிந்தாமணி பகுதியில் கதிர் அறுப்பு திருவிழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா செவ்வாய்கிழமை மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடைபெற்றது.
நேற்று காலை, சுவாமி பிரியாவிடையுடன் வெள்ளி வாகனத்திலும், அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும் எழுந்தருளி அம்மன் சன்னதி, சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். அங்கிருந்து முனிச்சாலை, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் எழுந்தருளினர்.
மாரியம்மன் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி, அம்மன் நேற்று காலை எழுந்தருளினர். சப்பரத்தை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மைய மண்டபத்தை இரண்டு முறை வலம் வந்தது. பின், மீண்டும் முக்தீஸ்வரர் கோயிலில் சேர்த்தியானது.
மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இரவு 8.30 மணிக்கு சுவாமி, அம்மன் மீண்டும் ஒருமுறை மைய மண்டபத்தை சப்பரத்தில் வலம் வந்தனர். தெப்பக்குளம், மைய மண்டபம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வான வேடிக்கை நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
தெப்பத்திருவிழாவான நேற்று அதிகாலையில் கோவிலில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் மாரியம்மன் தெப்பக்குளம் சென்று அங்கு தெப்பம் உற்சவம் நடைபெற்று இரவு கோவிலுக்கு வந்து சேரும் வரை மீனாட்சியம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது.
ஆனால் பக்தர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்காக கலைக்கூடம் (ஆயிரங்கால் மண்டபம்) திறந்து வைக்கப்பட்டு இருந்தது. கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் வாசல் வழியாக காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications