நெல்லை எஸ்.பி சரவணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்..தமிழக அரசு அதிரடி.. காரணம் என்ன?
நெல்லை: நெல்லை மாவட்ட எஸ்.பி சரவணனை காத்திருப்பு பட்டியலில் வைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியான எல்.பாலாஜிக்கு நெல்லை எஸ்.பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விசாரணைக் கைதிகளின் பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக பணியாற்றியவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங். இவர் தனக்கு கீழ் வரும் அம்பை காவல் உட்கோட்ட பகுதியில் சிறு சிறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணைக்கு அழைத்து வந்து பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தமிழக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. பல்வீர்சிங் மீது புகார்கள் எழுந்ததும் அவரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றிய தமிழக அரசு, அடுத்த சில நாட்களில் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தது. பல்வீர் சிங் மீதான புகார் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் நியமிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக உதவி கலெக்டர் முகம்மது சபீர் விசாரணை நடத்தி வருகிறார்.
பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் நடைபெற்று வரும் விசாரணையில் போலீசார் உள்பட 13 பேர் இதுவரை ஆஜராகி தங்களுடைய விளக்கங்களை அளித்துள்ளனர்.
இந்த நிலையில், நெல்லை மாவட்ட எஸ்.பி சரவணனை காத்திருப்பு பட்டியலில் வைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியான எல்.பாலாஜிக்கு நெல்லை எஸ்.பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விசாரணைக் கைதிகளின் பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நெல்லை மாவட்ட எஸ்.பி மீது தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications