திருவள்ளுவர்தான் 'அம்மாவை' காப்பாத்தனும்: மயிலாப்பூர் அதிமுக எம்.எல்.ஏ ராஜலட்சுமி
சென்னை: வழக்குகளில் இருந்து அம்மா விடுபட்டால்தான் நமக்கு வாழ்வு. வழக்கில் இருந்து திருவள்ளுவர்தான் அம்மாவை விடுவிக்கவேண்டும் என்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ராஜலட்சுமி கூறியுள்ளார்.
திருவள்ளுவர் பிறந்த தினத்தையொட்டி, திருவள்ளுவர் அவதரித்த மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில், திருவள்ளுவர், வாசுகி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் திருக்குறள் பாடப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ராஜலட்சுமி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

அம்மா வழக்கு
திருவள்ளுவரைப் பற்றி பேசிய எம்.எல்.ஏ ராஜலட்சுமி, பின்னர் அம்மா புரணம் பற்றி பேசினார். அம்மாவிற்கு சொத்துக்கள் எதுவும் தேவையில்லை. மக்களுக்காகத்தான் அவர் வாழ்கிறார். வழக்குகளில் இருந்து அவர் விடுபட்டு வந்தால்தான் நமகெல்லாம் வாழ்வு. அவர் வழக்குகளில் இருந்து விடுபட திருவள்ளுவர் அருள்புரியவேண்டும் என்றார்.
அமைச்சர்கள் மரியாதை
திருவள்ளுவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். தமிழ் வளர்ச்சிக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவர் சிலைக்கு கீழே உள்ள அவரது உருவப்படத்திற்கு அமைச்சர்கள் சின்னையா, அப்துல் ரஹீம், ஆர்வி உதயகுமார், கேசி வீரமணி, வளர்மதி, பிவி ரமணா, ராஜேந்திர பாலாஜி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பள்ளிக்குழந்தைகள் திருக்குறளின் சில அதிகாரங்களை பாடி திருவள்ளுவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications