தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி: முதல்வருக்கு தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச் சங்கம் கோரிக்கை!
சென்னை: தமிழகத்தில் அரசு தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி வகுப்புகளை மீண்டும் நடத்த வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர் ராஜ்குமார் முதல்வர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
ஓவியம், தையல், இசை பயிற்சி பெற விரும்பும் நபர்களுக்காக அரசு சார்பில் தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி மூன்று மாதங்கள் அளிக்கப்பட்டது.
ஆனால் பல்வேறு காரணங்களால் இப்பயிற்சி கடந்த 1994ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. பின்பு கடந்த 2002ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், தொடர்ச்சியாக பயிற்சி வகுப்பை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் மீண்டும் கடந்த 2007ம் ஆண்டு இப்பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டது.
ஆனால் பயிற்சி வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க கடந்த ஆண்டு வரை தமிழகம் முழுவதும் அரசு தொழில்நுட்பத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 55 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று பயிற்சிக்காக காத்துள்ளனர்.
மேலும், இந்த ஆண்டு அரசு தொழில்நுட்பத் தேர்வும் நடைபெறவில்லை. இது கலைத் தொழிலில் உள்ள அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எனவே, அரசு தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு மீண்டும் நடத்த வேண்டும். மேலும், அரசு தொழில்நுட்பத் தேர்வையும் நடத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications