சட்டசபை கூட்டத் தொடர் நிறைவு.. எப்போது அமைச்சரவை மாற்றம்? பீதியில் தமிழக அமைச்சர்கள்!!
சென்னை: தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்களால் மூத்த அமைச்சர்கள் பீதியில் இருக்கின்றனர்.
தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் புதிய அரசு அமைந்த கடந்த மூன்றரை ஆண்டுகளில் 16 முறை அமைச்சர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளனர். கடைசியாக கடந்த மே மாதம் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.

கடைசி அமைச்சரவை மாற்றம்
அப்போது வி.ரமணா, கே.டி.பச்சைமால், எஸ்.தாமோதரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கோகுல இந்திரா, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். அத்துடன் மேலும் 3 அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டன.

மீண்டும் மாற்றம்?
இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போதிருந்தே சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் நிச்சயம் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.

சட்டசபை தேர்தலை முன்வைத்து..
2016 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தமிழக அரசியல் கட்சிகள் தீவிர வியூகம் வகுத்து அடிப்படை களப் பணிகளை தொடங்கியுள்ளன. இதனால் சில மூத்த அமைச்சர்கள் நீக்கப்பட்டு கட்சிப் பணிக்கு அனுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது.

விஜயபாஸ்கர் நீக்கம்?
அண்மையில் செய்தியாளர்களுடன் மோதிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் நீக்கப்படலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த நேரத்திலும் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்பதால் அமைச்சர்கள் சிலர் பீதியில் இருக்கின்றனர்.

கே.ஏ. செங்கோட்டையன்?
அதே நேரத்தில் நீண்டகாலமாக அதிமுகவில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள கே.ஏ.செங்கோட்டையன் மீண்டும் அமைச்சராக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில புதுமுகங்களுக்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் அதிமுக நிர்வாகிகள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications