பிறந்தநாளைக் கூட கொண்டாடாமல் கமுக்கமாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தனது 62வது பிறந்தநாளை சத்தமில்லாமல் கொண்டாடியிருக்கிறார்.
சென்னை: சிலுவம்பாளையத்தில் பிறந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வராக அமர்ந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது 62வது பிறந்தநாளினை கமுக்கமாக கொண்டாடி வருகிறார். இந்த நாளில் தமிழக மக்களுக்கு தேவையான மிக முக்கிய அறிவிப்பினை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஓபிஎஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் ஏற்பட்ட அரசியல் சலசலப்பில் சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்.

விவசாயி பழனிச்சாமி
பிப்ரவரி 16, 2017 அன்று பதவியேற்ற எடப்பாடி கே.பழனிச்சாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி நெடுங்குளம் அருகே உள்ள சிலுவம்பாளையத்தில் 1954ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதியன்று பிறந்தார். கருப்ப கவுண்டர், தவுசாயம்மாள் தம்பதியின் கடைசி மகனாக எளிமையான விவசாயக் குடும்பத்தில் வளர்ந்தவர்.

செங்கோட்டையன் சிஷ்யர்
தான் ஒரு விவசாயி என்று இப்போதும் கூறிக்கொள்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. வெல்ல வியாபாரம் தொடங்கி அரசியலில் செங்கோட்டையனின் சிஷ்யராக இணைந்தார். இப்போது குருவை மிஞ்சிய சிஷ்யராக முதல்வராக அமர்ந்துள்ளார்.

62வது பிறந்தநாள்
தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவருக்கு இன்று 62 வயதாகிறது. ஆனால் அவரது பிறந்தநாளை இன்று சத்தமில்லாமல் கொண்டாடி வருகிறார்.

அறிவிப்பு வெளியாகுமா?
தமிழகத்தில் தற்போதைய தலையாய பிரச்னைகளில் ஒன்று ஹைட்ரோ கார்பன் திட்டம் தான். இத்திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் விவசாயிகளின் குரலை முதல்வர் கவனித்து முடிவெடுப்பாரா? ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்தி மக்களின் மனதில் இடம் பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications