உள்துறை இணை அமைச்சர் வருகை எதிரொலி: விஜயேந்திரருக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் தமிழக அரசு?
காஞ்சி சங்கர மடத்துக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ வருகை தந்துள்ள நிலையில் விஜயேந்திரருக்கு எதிரான போராட்டங்களை தமிழக அரசு ஒடுக்கக் கூடும் என தெரிகிறது.
சென்னை: காஞ்சி சங்கர மடத்துக்கு உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜூ வருகை தந்துள்ளதையடுத்து விஜயேந்திரருக்கு எதிரான போராட்டங்களை தமிழக அரசு ஒடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்துவிட்டு அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது காஞ்சி சங்கர மடமும் அவர்களது ஆதரவாளர்கள் கூட்டமும். ஆனால் தமிழகம் முழுவதும் இதுவரை இல்லாத வகையில் மக்கள் தன்னெழுச்சியாக காஞ்சி சங்கர மடத்துக்கு எதிராக தீவிரமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சங்கர மடம் முற்றுகை
தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரரின் உருவ படங்கள், கொடும்பாவிகள் எரிப்பு, செருப்பு மாலை அணிவித்தல், சங்கர மடம் முற்றுகை என போராட்டம் வெடித்திருக்கிறது. பல இடங்களில் விஜயேந்திரரை கைது செய்ய கோரி போலீசில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசிடம் கெஞ்சல்
இப்போராட்டங்களால் காஞ்சி சங்கர மடத்தை விட்டு வெளியே வர முடியாத நிலையில் சங்கராச்சாரியார்கள் உள்ளனர். தங்களுக்கு எதிரான தமிழகத்தின் கொந்தளிப்பு குறித்து மத்திய அரசிடம் முறையிட்டு கெஞ்சி கூப்பாடு போட்டிருக்கிறது சங்கர மடம்.

சங்கராச்சாரியார்களுடன் ஆலோசனை
இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜூ நேற்று காஞ்சி சங்கர மடம் வருகை தந்தார். சங்கராச்சாரியார்களுடன் கிரண் ரிஜுஜூ ஆலோசனை நடத்தினார்.

போராட்டங்களை ஒடுக்கும் அரசு?
இச்சந்திப்பைத் தொடர்ந்து விஜயேந்திரருக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க தமிழக அரசுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட வாய்ப்புள்ளது. இதனால் விஜயேந்திரருக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க தமிழக அரசு முனைப்பு காட்டவே செய்யும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications