ஜெ. மரணத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிறார் ஓபிஎஸ்: அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு
ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிறார் ஓ. பன்னீர்செல்வம் என அமைச்சர் விஜயபாஸ்கர் சாடியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிறார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கடுமையாக தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பன்னீர்செல்வமும் அவரது அணியைச் சேர்ந்த சிலரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். உண்மை நிகழ்வுகள் அனைத்தையும் உடனிருந்து நன்கு அறிந்திருந்தபோதிலும் பன்னீர்செல்வம் ஆட்சேபத்திற்குரிய வகையிலான செய்திகளைக் கூறி வருவதன் மூலம், ஜெயலலிதாவின் புகழுக்குக் களங்கம் சேர்ப்பதோடு, அரசியல் ஆதாயம் பெறவே இத்தகைய கருத்துகளைத் தொடர்ந்து மக்கள் மனங்களில் விதைக்க முயற்சிக்கிறார்.
மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு புகழ்பெற்ற மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அவருக்கான சிகிச்சையைக் கண்காணிக்க தமிழக அரசின் சார்பில் 5 மருத்துவர்கள் கொண்ட சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டது. அந்த மருத்துவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சைகளைப் பற்றிய முழுத் தகவலையும் பெற்று வந்தார்கள்.

ஓபிஎஸ்-ம் உடனிருந்தாரே
தமிழக அரசின் தலைமைச் செயலாளர், அரசு ஆலோசகர், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், முதல்வரின் செயலர்கள் ஆகியோருக்கு ஒவ்வொரு நாளும் காலையில் சிகிச்சை குறித்த விவரங்களை மருத்துவர்கள் குழு விரிவாக எடுத்துரைத்தது. அத்தகைய கூட்டங்களில் பல நேரங்களில் பன்னீர்செல்வமும் பங்கேற்றார் என்பதை அவர் நினைவில் வைத்துப் பேச வேண்டும்.

முதல் நபராக...
இந்த நிலையில் சிகிச்சை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றால் அதில் முதல் நபராக விசாரிக்கப்படுபவர் அவராகத்தான் இருக்கும் என்பதை உணர வேண்டும். கடந்த 11.10.2016 அன்றே, அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரம் அவருக்குத் தரப்பட்டது.

மரணத்தை கொச்சைபடுத்துகிறார்..
அவருக்குத் தெரியாமல் எந்தவொரு சிகிச்சையும் ஜெயலலிதாவுக்கு தரப்படவில்லை. இப்போது முதல்வர் பதவி இல்லை என்ற நிலையில், ஜெயலலிதாவின் மரணத்தையே கொச்சைப்படுத்தும் அளவிற்கும் அவரை உலகிற்கு அறிமுகம் செய்த அதிமுகவைக் களங்கப்படுத்தும் விதமாகவும் பேசி வருகிறார்.

ஜெ. ஆன்மா மன்னிக்காது
பல்வேறு அரசியல் தலைவர்களை வரவேற்று அப்பல்லோ மருத்துவர்கள் சிகிச்சை குறித்து அவர்களுக்கு விளக்கும்போது உடனிருந்த பன்னீர்செல்வம், அப்போது ஒரு முறை கூட மருத்துவர்களின் விளக்கத்தில் சந்தேகம் எழுப்பவில்லை. ஆனால், இன்றைக்கு அவரின் மரணத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுவிட்டார். பதவியில் இருக்கும்போது ஒரு பேச்சு. பதவியில் இல்லாத போது ஒரு ஏச்சு என்று பன்னீர்செல்வம் இன்று மேற்கொண்டிருக்கும் நிலைப்பாட்டை ஜெயலலிதாவின் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது. இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications