ஒரு அமைச்சர் கூட தூத்துக்குடி பக்கம் எட்டிப் பார்க்கலையே.. மக்கள் வேதனை
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீஸார் சகட்டு மேனிக்கு துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் நிலையில் தமிழக அமைச்சர்கள் யாருமே எட்டிக் கூட பார்க்காமல் இருப்பது மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவத்திற்குக் மூல காரணமாக கூறப்படும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.,பியைக் கூட 2 நாள் கழித்து நேற்றுதான் தமிழக அரசு இடமாற்றம் செய்தது. மக்களின் கொதிப்பும், ஆவேசமும் கூடிய நிலையில்தான் இந்த நடவடிக்கையும் கூட அமைந்தது.
தூத்துக்குடி 3 நாட்களாக அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். வெளியில் தலை காட்டினால் சுடப்படுவோம் அல்லது தாக்கப்படுவோம் என்ற பேரவல நிலை. இப்படிப்பட்ட நிலையில் அதிமுகவினர் யாருமே அங்குள்ள மக்களுக்கு ஆதரவாக இருப்பது போலத் தெரியவில்லை.
தமிழக அமைச்சர்கள் யாருமே இன்னும் எட்டிக் கூட பார்க்கவில்லை. ஜெயக்குமார்தான் ஆரம்பத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். மற்றவர்கள் அமைதியாக உள்ளனர். தூத்துக்குடிக்கு எந்த அமைச்சராவது வருவார்களா என்றும் தெரியவில்லை. தூத்துக்குடி நிலவரம் முற்றிலும் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதும் தெரியவில்லை.
நிலைமை இத்தனை மோசமாகியும் கூட அமைச்சர்கள் யாரும் வராமல் இருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இது எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுகதானா, நடப்பது ஜெயலலிதா ஆட்சிதானா என்ற குழப்பமும், வேதனையும் மக்களை பெரும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த அளவுக்கு தூத்துக்குடி ரத்தம் சிந்தியிருக்குமா என்றும் மக்கள் குமுறுகின்றனர்.
ஒரு வேளை தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பதால் அமைச்சர்கள் யாரும் வர யோசிக்கிறார்களா என்று தெரியவில்லை!