டெங்குவை கட்டுப்படுத்த ரூ. 265 கோடி நிதி- மத்திய குழுவிடம் தமிழகம் கோரிக்கை
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் , நோய் தடுப்புகளுக்காக ரூ. 265 கோடி நிதி மத்திய குழுவிடம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை: டெங்குவைக் கட்டுப்படுத்த ரூ.256 கோடி நிதி வேண்டும் என்று, மத்திய அரசுக்குத் தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. சென்னை தொடங்கி குமரி வரை 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் ஆய்வுக் குழு நேற்று தமிழகம் வந்துள்ளது. இந்தக் குழு தமிழக அரசு அளிக்கும் அறிக்கையைப் பெற்று அதன் அடிப்படையில் அடுத்தகட்ட ஆய்வை மேற்கொள்ள உள்ளது.
எய்ம்ஸ் மருத்துவர் அசுதோஷ் பிஸ்வால் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட மத்திய அரசின் மருத்துவக் குழுவினர், சென்னை மருத்துவக் கல்வி இயக்கக வளாகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், ஆய்வுக் குழுவினர், அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு மத்திய அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில், அக்டோபர் 12, 2017 வரை வெறும் 18 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 12,324 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த அக்டோபர் 9ஆம் தேதி வரை 40 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்ததாகவும் 11,700 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு நேற்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது. ஆனால், மத்திய அரசுக்கு அனுப்பும் அறிக்கையில் பாதிக்கும் குறைவாக பலி எண்ணிக்கையை குறிப்பிட்டுள்ளது.
கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள ரூ.256 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்கும் என்று நம்புகிறேன். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மத்தியக் குழு ஆய்வு செய்யும் என்று தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த ஒரே தீர்வு கொசுக்களை ஒழிப்பதுதான். டெங்குவிலிருந்து தப்பிக்க நம்முடைய பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும், டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்று மருத்துவ ஆய்வுக் குழுவைச் சேர்ந்த அசுதோஷ் பிஸ்வால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications