ஓசூர்: 2 யானைகள் மர்ம மரணம்... தந்தத்திற்காக அஞ்செட்டி கொள்ளையர்கள் வேலையா?
ஓசூர்: ஓசூர் வனப்பகுதியில் தந்தங்களற்ற நிலையில் இரண்டு யானைகளின் உடல்கள் வனத்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. தந்தங்களுக்காக அஞ்செட்டி கொள்ளையர்களால் அவைக் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப் படுகிறது.
ஓசூர் வனப் பகுதிக்கு உட்பட்ட ஜவலகிரி வனப்பகுதியில் இரண்டு யானைகளின் இறந்த உடல்களை வனத்துறையினர் கண்டெடுத்துள்ளனர். இந்த இரு யானைகளும் சில நாட்களுக்கு முன்புதான் மரணத்தைச் சந்தித்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.
யானைகளின் உடல்கள் மீட்கப்பட்ட பகுதி அஞ்செட்டி கொள்ளையர்கள் வலம் வரும் பகுதியாகையால், இது அவர்களின் வேலையாக இருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

தந்தங்களைக் காணவில்லை...
இறந்த யானைகளின் உடலில் தந்தங்கள் இல்லை. எனவே அஞ்செட்டி கும்பல்தான் யானகைளைக் கொன்று தந்தங்களைத் திருடியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

யானைகள் புகலிடம்...
கர்நாடக மாநிலம் பன்னரகட்டா மற்றும் கனகபுரா வனப்பகுதியை ஒட்டியுள்ள வனச் சரகம்தான் ஓசூர் வனச்சரகம். இந்த மூன்று வனச்சரகமும் சேர்ந்து யானைகள் புகலிடமாக உள்ளது.

இடி தாக்கியதா..?
ஆனால் இடி தாக்கித்தான் இந்த யானைகள் இறந்திருக்கலாம் என்று ஓசூர் வனத்துறையினர் சிலர் கூறுகின்றனர். மற்றபடி தந்தங்களைத் திருடுவதற்காக அவை கொல்லப்படவில்லை என்பது அவர்களின் கருத்தாகும்.

ஒரு வார காலம்...
இதுகுறித்து ஓசூர் வனச்சரகத்தைச் சேர்ந்த மாவட்ட வன அதிகாரி உலகநாதன் கூறுகையில், இரு யானைகளும் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு வாரத்திற்கு முன்பு அவை இறந்துள்ளன. மின்னல் அல்லது இடி தாக்கி இறந்திருக்கலாம் என்றார்.

சந்தேகம்....
ஆனால் அதில் ஒரு யானையின் தந்தங்கள் எல் ஷேப்பில் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதால் கொள்ளையர்கள் கைவரிசையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே திட்டமிட்டு ஒரு கும்பல் இப்பகுதியில் யானைத் தந்தங்களைத் திருடி வருவதாக சந்தேகம் உண்டாகியுள்ளது. குறிப்பாக இவர்கள் அஞ்செட்டி பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கூட்டு படை ரோந்து தேவை...
யானைகள் வேட்டையாடப்படுவதாக வந்துள்ள சந்தேகத்தைத் தொடர்ந்து தமிழக மற்றும் கர்நாடக வனப்பகுதியில் அஞ்செட்டி கும்பல் நடமாட்டத்தைத் தடுக்கவும், ஒடுக்கவும் இரு மாநில கூட்டு படை ரோந்து தேவை என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

தந்தங்கள் பறிமுதல்
கடந்த 2013 ஜூலை மாதம் பெங்களூர் போலீஸார் ஒரு கும்பலிடமிருந்து 6 தந்தங்களைப் பறிமுதல் செய்தனர். இதை செய்தது அஞ்செட்டி கும்பல் என்று அப்போது தெரிய வந்தது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆனேக்கல் போலீஸார் 2 தந்தங்களைப் பறிமுதல் செய்து 2 பேரைக் கைது செய்தனர்.

அஞ்செட்டி கும்பல்...
இவர்களும் அஞ்செட்டியைச் சேர்ந்தவர்கள்தான். இந்த அஞ்செட்டி கும்பலானது தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள வனப்பகுதியில் தீவிரமாக செயல்படுவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications