இந்துக்கள் குறித்து தவறான கருத்தை பரப்புகிறார் கமல்... போலீசில் விஎச்பி புகார்
இந்துக்கள் குறித்து தவறான கருத்தை கமல்ஹாசன் பரப்பி வருவதாக தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது.
Recommended Video
சென்னை : இந்துக்கள் குறித்து தவறான கருத்தை பரப்பி வரும் நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்துத் தீவிரவாதம் குறித்து அண்மையில் நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து தீவிரவாதிகள் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்று கமல்ஹாசன் கூறி இருந்ததற்கு பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன.
உத்தரபிரதேசத்தில் கமல்ஹாசன் மீது மதத்திற்கு எதிராக அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கமல்ஹாசன் போன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபா தேசியத் துணைத்தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு பல்வேறு எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன. இதனிடையே தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சென்னை மண்டலத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்துக்கள் குறித்து தவறான கருத்துகளை கூறி வரும் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்று அந்த புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் கட்சி அமைப்பாளர் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி விமர்சித்துள்ளார்.