ஆக. 31க்குள் விநாயகர் சிலைகளை கரைக்க தூத்துக்குடி போலீஸ் உத்தரவு
தூத்துக்குடி: தூத்துக்குடியில், விநாயகர் சிலைகளை வருகின்ற ஆகஸ்டு 31ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட்ட இடங்களில் கரைக்கவேண்டும் தூத்துக்குடி நகர காவல்துறை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி உத்தரவி்ட்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநகரின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளது. இதற்கான உரிய அனுமதி பெற்ற பிறகே சிலைகளை வைக்கவும் காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி காவல்துறை ஆய்வாளர்களின் கூட்டம் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் தூத்துக்குடி நகர காவல்துறை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களிடம் பேசிய நகர காவல்துறை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை வருகின்ற ஆகஸ்ட்டு 31ஆம் தேதிக்குள் கடலில் கரைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
இதில் தூத்துக்குடி மாநகர் காவல்துறை ஆய்வாளர்கள் சுரேஷ், சைரஸ், ஹரிஹரன் மற்றும் ரேனியஸ் ஜேசுபாதம் உள்ளிட்ட ஆய்வாளர்கள் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.