துர்நாற்றத்தில் தவிக்கும் தூத்துக்குடி... மழை முடிந்தும் குடியிருப்புகளில் தேங்கி கிடக்கும் நீர்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழை முடிந்தும் கூட ஆங்காங்கே தொடர்ந்து தேங்கிக் கிடக்கும் மழை நீரால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நீரை அகற்ற ஒரு நாதியும் இல்லாமல் போய் விட்டதால் மக்கள் பெரும் கொதிப்பில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பலத்த மழையாக பெய்தது. தொடர் மழையின் காரணமாக புதுக்கோட்டை காட்டாற்று வெள்ளம் அந்தோணியார்புரம், கோரம்பள்ளம், கலெக்டர் அலுவலகம் வழியாக தூத்துக்குடி மாநகருக்குள் புகுந்தது. இதனால் மாநகரிலுள்ள மில்லர்புரம், 3ம் மைல், தபால்தந்தி காலனி, முத்தம்மாள் காலனி, குறிஞ்சி நகர், ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது.

இதுபோக மாநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே மழைநீர் செல்வதற்கு வழியின்றி கழிவுநீருடன் கலந்து தேங்கியது. மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழைநீர் அகற்றப்படாமல் குட்டை போல தேங்கி கிடக்கிறது. வீடுகளை சுற்றி தேங்கி கிடக்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். சுகாதாரமற்ற கழிவுநீரால் தொற்றுநோய்களும் பரவி வருகிறது.
குடியிருப்புகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை அகற்றக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட பொதுநலவழக்கில் டிசம்பர் 21ம் தேதிக்குள் தேங்கி கிடக்கும் மழைநீரை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் துரிதமாக அகற்றிடவேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது. இருந்தபோதும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக, தமாகா உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கேற்ப தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்குட்பட்ட அன்னை வேளாங்கண்ணி நகர், மில்லர்புரம் அன்னை தெரசா நகர், ஆதிபராசக்தி நகர், குறிஞ்சி நகர், தனசேகரன் நகர், முல்லை நகர், ராம் நகர், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் இன்னும் மழைநீர் முழுமையாக அகற்றப்படவில்லை.
பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ள மழைநீர் மற்றும் கழிவுநீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மெத்தனப்போக்குடன் செயல்படுத்தி வருவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். தற்போது மாநகர் பகுதிகளில் மழை விட்டு பரவலாக வெயில் அடித்து வரும் சூழலில் மழைநீர் அகற்றும் பணிகளை இனியாவது மாநகராட்சி நிர்வாகம் துரிதமாக மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.












Click it and Unblock the Notifications