வெள்ளத்தில் மிதக்கும் தூத்துக்குடி: தொழில்கள் முடக்கம், இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தூத்துக்குடி: தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தூத்துக்குடியில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தூத்துக்குடி, ஓட்டப்புதூர், புதியம்புதூர், மணியாச்சி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. குளங்கள் உடைந்ததால் நகரமே வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறது. ஏற்கனவே ஏற்பட்ட வெள்ள பாதிப்பிலிருந்து தூத்துக்குடி இன்னும் மீளாத நிலையில் நள்ளிரவில் பெய்ய தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை தொடர்ந்ததால் புறநகர் பகுதி வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

முத்தையாபுரம், முத்தம்மாள் காலனி பகுதியில் ஏற்கனவே வெள்ளம் வடியாத நிலையில் மீண்டும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர். மிகப்பெரிய பம்பு செட் வைத்து தண்ணீரை வெளியேற்றிய சில நிமிடங்களில் மீண்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் திகைத்து போய் வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சியாக உயர்ந்துள்ள நிலையில் அங்கு முறையான கழிவு நீரோடை இல்லை. இதனால் ஒவ்வொரு வீட்டிலும் தனி தொட்டி அமைத்து கழிவு நீரை வெளியேற்றி வருகின்றனர். மேலும் மழை நீடிப்பதால் மக்கள் தரை தளத்தில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தொடர் மழையால் தொழில்களும் முடங்கி வருகின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் பருப்புக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நிவாரணத்தையும் செய்ய முடியாமல் திணறி போயுள்ளது.












Click it and Unblock the Notifications