பந்த்: கர்நாடகா அரசு பேருந்துகளை நாளை சிறைபிடிப்போம் – தி.வேல்முருகன் எச்சரிக்கை
சென்னை: விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், தமிழகத்தில் தமிழகத்துக்கு வரும் கர்நாடகா அரசு பேருந்துகளை சிறைபிடிப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் கர்நாடகா அரசு எதேச்சதிகரமாக அணை கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. ஒட்டுமொத்த தமிழகமே கடுமையாக எதிர்க்கிற போதும் வாய்மூடி மவுனியாக இருக்கிறது மத்திய அரசு.

தமிழகத்தின் ஆற்று நீர் உரிமையை அபகரிக்கும் கர்நாடகாவின் இந்த அத்துமீறலைக் கண்டித்து தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நாளை மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் என்று விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
மத்திய அரசு காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தையும் அமைக்கவில்லை; கர்நாடகாவின் அட்டூழியத்தையும் கண்டிக்கவில்லை.. இரு அண்டை மாநிலங்களை மோதவிடுவதற்குதான் மத்திய அரசு இருக்கிறதா?
தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தினால், கர்நாடகாவில் உள்ள தமிழ் தொலைக்காட்சிகள் இயங்கக் கூடாது; தமிழ்த் திரைப்படங்களை திரையிடக்கூடாது; தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலார் வைகோ ஆகியோரது உருவ பொம்மை எரிகளை எரிப்போம் என்று கன்னட வெறியன் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளான்.
வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட வெறியர்களே! நாளைய முழு அடைப்பின் போது கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு ஒரு துரும்பேனும் தீங்கு ஏற்பட்டால் தமிழகத்தில் வாழும் கன்னடர்களுக்கு மிக மோசமான விளைவுகள் ஏற்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் கன்னடர்கள் நடத்துகிற தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவர்; தமிழகத்துக்குள் நுழையும் கன்னட அரசுப் பேருந்துகள், வாகனங்கள் அனைத்தையும் சிறைபிடிப்போம் எனவும் எச்சரிக்கிறேன்.
தீர்மானத்திற்கு வரவேற்பு
காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டக் கூடாது; கர்நாடகா அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்கிறது.
தமிழக முதல்வர் அவர்கள் கேட்டுக் கொண்டதைப் போல தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை வலியுறுத்த வேண்டும். தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஜாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications