சேலத்தில் பயங்கரம்: பிச்சை எடுத்த 2 பெண்கள் ஒரே நாளில் பலாத்காரம் செய்து கொலை
சேலம்: சேலத்தில் ஒரே நாளில் 2 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இருவரும் தெருவில் பிச்சை எடுத்து வந்தவர்கள்.
சேலம் கோரிமேட்டில் மலபார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. அதை கேரளாவைச் சேர்ந்த தேவதாஸ் என்பவர் நடத்தி வருகிறார். தர்மபுரி மாவட்டம் தொப்பூரை சேர்ந்த ரவிச் சந்திரன்(42) அந்த ஹோட்டலில் சமையல் மாஸ்டராக உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேவதாஸ் கேரளாவுக்கு சென்றதால் ஹோட்டலுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
ஹோட்டலிலேயே தூங்கும் பழக்கம் உள்ள ரவிச்சந்திரன் மட்டும் அங்கு தங்கியிருந்தார். இன்று காலை ஹோட்டலின் முன் கதவு திறந்தபடி இருந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தபோது ஹோட்டலுக்குள் 50 வயது மதிக்கத்தக்க பெண் தலை, முகத்தில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண் கோரிமேட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்தவர் என்பது தான் அனைவருக்கும் தெரியுமே தவிர அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். அந்த பெண்ணை ரவிச்சந்திரன் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையே ரவிச்சந்திரன் தலைமறைவாகிவிட்டார்.
சேலம் ஃபேர்லேண்ட்ஸ் பகுதியில் உள்ளது சிவாய நகர். அங்கு இருக்கும் அழகாபுரம் காட்டூர் ஆட்டோ நிறுத்தும் இடம் அருகே உள்ள புங்கமரத்தில் பெண் ஒருவர் தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 50 வயது இருக்கும். ஜாக்கெட் இல்லாமல் வெறும் உள்பாவாடையுடன் அவர் பிணமாகத் தொங்கினார். அவரது முகத்தில் கற்களால் தாக்கிய காயங்கள் காணப்பட்டன.
சேலையை கிழித்து அவர் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார். அவர் பிணமாகத் தொங்கிய இடத்தில் பீர் பாட்டில்கள், முறுக்கு, மிக்சர், தண்ணீர் பாக்கெட்டுகள் கிடந்தன. அவர் அப்பகுதியில் பிச்சை எடுத்து வந்தவர். போலீஸ் விசாரணையில் அவரை யாரோ பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்டது தெரிய வந்துள்ளது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
ஒரே நாளில் இரண்டு பெண்கள் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருப்பது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications