கடன் தள்ளுபடி... குறைந்தபட்ச ஆதரவு விலை... எதுவும் பட்ஜெட்டில் இல்லை... வேதனையில் விவசாயிகள்
தஞ்சாவூர்: மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு என்று அறிவிப்பு இல்லாததால் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது என்றும் விவசாயக் கடனை தள்ளுபடி செய்யாதது கண்டிக்கத்தக்கது என்றும் தஞ்சை மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். கொரோனா காரணமாக இந்த பட்ஜெட் முதல் முறையாகக் காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. மேலும், தலைநகரில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்,வேளாண் துறைக்கு இந்தப் பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல பெண்கள் மற்றும் விவசாயிகளை மையமாகக் கொண்டே தனது உரையை நிதியமைச்சர் தொடங்கினார். விவசாயிகளின் நலனில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய போது, எதிர்க்கட்சி எம்பிகள் கோஷமிட தொடங்கினர்.
வேளாண் துறை அறிவிப்புகள்
தொடர்ந்து பேசிய அவர், அனைத்து பயிர்களின் உற்பத்தி விலையைவிடக் குறைந்தபட்சம் 1.5 மடங்கு விலையை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்கை மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 1.5 கோடி விவசாயிகள் பலனடைந்தனர் என்றும் அவர் தெரிவித்தார். இந்தாண்டு விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் இலக்கை ரூ .16.5 லட்சம் கோடியாக உயர்த்தவுள்ளதாகவும் நிதியமைச்சர் கூறினார்.
எம்.எஸ். சுவாமிநாதன் குழு
மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் பி செந்தில்குமார் கூறுகையில், "நாங்கள் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நெல்லுக்கு 2,700 ரூபாயை குறைந்தபட்ச ஆதரவு விலையாக அறிவிக்கக்கோரிக் கேட்கிறோம். ஆனால், பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு இல்லை, கடந்த சில ஆண்டுகளாகவே, பொட்டாசியம் உள்ளிட்ட இடுபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செலவுகளுக்கு ஏற்ற வகையில் விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் இயற்கையாகவே கடன் வலையில் சிக்கிக் கொள்கின்றனர். சமீப காலமாக இயற்கை பேரிடர்களும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
விவசாயக் கடன் தள்ளுபடி
இதனால் விவசாயக் கடனை ஒரு முறை மட்டும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்தோம். ஆனால், இந்த பட்ஜெட்டில் இந்த அறிவிப்பும் இல்லை. எம்எஸ் சுவாமிநாதன் குழு அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி என நாங்கள் எதிர்பார்த்த ஏதுவும் இதில் இல்லை. எனவே, எங்களுக்கு இது ஒரு ஏமாற்றம் தரும் ஒரு ஒரு பட்ஜெட்தான்" என்றார்.
போதுமானதாக இல்லை
மத்திய அரசின் பட்ஜெட் குறித்து ராம் குமார் என்ற விவசாயி கூறுகையில், " பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஏதேனும் முக்கிய அறிவிப்பு இருக்கும் என்று நாங்கள் ஆவலாக எதிர்பார்த்திருந்தோம். தொழில் வளர்ச்சி குறித்த அறிவிப்புகள்தான் பல இருந்தன. ஆனால், இது விவசாய நாடு என்பதை மறந்து விடுகிறோம். விவசாயிகள் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. நிலைமை இப்படியே சென்றால் நாளை நமக்கு உணவு கூட கிடைக்காது.
தனியார் மயமாக்கலை ஊக்குவிக்கும் பட்ஜெட்
விவசாயிகள் போராட்டத்தைக்கூடக் கட்சி ரீதியாகவே அணுகுகிறோம், அது தவறு. இயற்கை பேரிடர்கள் எப்படி கட்சி ரீதியாகப் பாதிப்பதில்லையோ அதேபோல்தான் விவசாயிகள் பிரச்னையும்! ஏழையாக இருந்தால் மட்டுமே விவசாயிகள் நிவாரணம் வேண்டி அரசிடம் வருவார்கள் என்பதால், திட்டமிட்டு அவர்களை ஏழைகளாகவே வைத்துள்ளனர். இந்த பட்ஜெட் தனியார் மயமாக்கலை ஊக்குவிக்கும் வகையிலேயே உள்ளது" என்று கூறினார்.