பிய்த்துக் கொண்டு கிளம்பும் நிர்வாகிகள்.. மறுபக்கம் புதிய பொறுப்பாளர்களை நியமித்த வைகோ
சென்னை: காஞ்சிபுரம், சேலம், மதுரை புறநகர் மாவட்டங்களை இரண்டாக பிரித்து புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டக் கழக நிர்வாக வசதிக்காக காஞ்சிபுரம் கிழக்கு மற்றும் காஞ்சிபுரம் மேற்கு என இரு மாவட்டக் கழகங்களாக பிரிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக ஆர். பார்த்திபன், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக ஜெகன்.தனசேகரன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
சேலம் மாவட்ட கழகம் நிர்வாக வசதிக்காக சேலம் கிழக்கு மற்றும் சேலம் மேற்கு என இரு மாவட்டக் கழகங்களாக பிரிக்கப்படுகிறது. சேலம் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக வ.கோபால்ராஜ், சேலம் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக மகேந்திரன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
மதுரை புறநகர் மாவட்ட கழகம் நிர்வாக வசதிக்காக மதுரை புறநகர் வடக்கு மற்றும் மதுரை புறநகர் தெற்கு என இரு மாவட்டக் கழகங்களாக பிரிக்கப்படுகிறது. மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக எம்.மார்நாடு, மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக வழக்கறிஞர் எம்.ஆர்.கதிரேசன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
ம.தி.மு.க. மகளிர் அணி செயலாளராக டாக்டர் ரொஹையா நியமிக்கப்படுகிறார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அ.நடராசன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு உளுந்தூர்பேட்டை க.ஜெய்சங்கர் நியமிக்கப்படுகிறார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மதிமுகவில் இருந்து கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு, சேலம் மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன், மாநில மகளிரணி செயலாளர் குமாரி விஜயகுமார் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். மாநில பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் மதிமுகவில் இருந்து விலகினர் இந்த நிலையில் மாவட்டங்களை இரண்டாக பிரித்து பொருப்பாளர்களை நியமித்துள்ளார் வைகோ.