விஜயகாந்த் அலுவலகத்தை முற்றுகையிட்டு வைகுண்டராஜன் ஆதரவாளர்கள் போராட்டம்
சென்னை: தூத்துக்குடி விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் வைகுண்டராஜனை விமர்சித்துப் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைக் கண்டித்து சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தை வைகுண்டராஜன் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் நடந்த தேமுதிக ஆண்டு விழா பொதுக் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த்தும், அவரது மனைவி பிரேமலதாவும், வைகுண்டராஜனை கடுமையாக சாடிப் பேசினர். மேலும் மணல் கொள்ளைக்கு எதிராகவும் தீவிரமாகப் பேசினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகுண்டராஜன் ஆதரவாளர்கள் கிளம்பியுள்ளனர். மேலும் இது ஜாதிப் பிரச்சினையாகவும் மாற்றப்பட்டுள்ளது. நாடார் சமுதாய அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.
இந்தப் பின்னணியில், விஜயகாந்த்தை கண்டித்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தை தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து. ரமேஷ் தலைமையில் வைகுண்டராஜன் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதத்தைத் தடுக்கும் வகையி்ல அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.