மீனவர்கள் விடுதலைக்கு பெரும் முயற்சி எடுத்தோம்; பிரதமருக்கு நன்றி: ஜி. கே.வாசன்!
திருச்சி: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களின் விடுதலைக்காக தான் பெரும் முயற்சி எடுத்ததாக ஜி. கே. வாசன் தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திரமோடிக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் வரும் 28-ந்தேதி ஜி,கே.வாசன் தலைமையிலான புதிய கட்சியின் தொடக்க விழா திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஜி.கே.வாசன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்களான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ராஜசேகரன், என்.எஸ்.வி.சித்தன், முன்னாள் திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜி. கே வாசன் "கட்சியின் தொடக்கவிழா பொதுக்கூட்டத்திற்கு முகூர்த்தகால் நடும் நிகழ்வும், இலங்கை சிறையில் பொய் குற்றச்சாட்டின் பேரில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி 5 தமிழக மீனவர்கள் எல்லோரின் முயற்சியினாலும் விடுதலையாகியிருப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தந்துள்ளது.
மீனவர் விவகாரத்தில் இயக்கம் தொடங்கிய 48 மணி நேரத்தில், முதல்முதலாக பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். தொடர்ந்து 5 மீனவர்களும் விடுதலை பெற வேண்டும் என முயற்சி எடுத்தோம். இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தரவே, இப்போது அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். இனிமேல் இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கும்,அவர்கள் வாழ்வாதாரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய வாசன் "திருச்சியில் 28-ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டம் வருங்கால தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் அடித்தளமாக அமையும். நிச்சயம் இந்த பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் புதிய திருப்பு முனையாக அமையும். கூடவே தமிழகத்தில் ஜி.கே.மூப்பனார் ஆசியோடு காமராஜர் ஆட்சி அமைப்போம். அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறவர்கள் நாங்கள் இயக்கம் தொடங்கிய முதலே ஆதரவு தந்து கொண்டேயிருக்கிறார்கள். இப்போது எங்களுக்கு ஆதரவு பெருகியுள்ளது" என்றார்
வாசன் பிரிந்து சென்றதால் எங்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் காங்கிரஸிற்கு தான் ஆதரவு உள்ளது என ஈ.வி. கே.எஸ் இளங்கோவன் சொல்லி வருகிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வாசன், "இதற்கெல்லாம் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டம் மூலம் பதிலடி கொடுப்போம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் "சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கும் நிலையில் தமிழகத்தில் பலம் வாய்ந்த இயக்கமாக எங்களது இயக்கத்தை உருவாக்க கிராமங்கள் முதல் நகரங்கள் வரை எங்கள் மக்களை சந்தித்து அந்தந்த பகுதி குறைகளை கேட்டு அறிந்து பிரச்சனைகளை தீர்க்கும் இயக்கமாக செயல்படுவோம். சிறு சிறு கட்சிகள், இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்காலத்தில் எங்களுடன் இணைந்து செயல்பட ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலை புலிகளுக்கு ஆதரவு கொடுப்பவர்களுடன் எந்த காலத்திலும் ஆதரவு கிடையாது. கர்நாடகத்தில் புதிதாக 2 அணைகளை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுப்பது தவறானது. உச்ச நீதிமன்றத்தை மதித்து செயல்படவேண்டும். இதற்காக 22-ந்தேதி காவிரி டெல்டா விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் எங்கள் இயக்கத்தினர்கள் தமிழகம் முழுக்க ஆங்காங்கே கலந்து கொள்வார்கள்.
மேலும் தமிழகத்தில் பால் விலை, மின்கட்டணம் விலை ஏற்றம் உள்ளிட்டவை பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. அரசு ஏழை மக்களை பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 12 குழந்தைகள் இறந்ததற்கு தாய்மார்களை குறை சொல்கிறார்கள். இதில் துளியளவும் நியாயமில்லை. தமிழகத்தில் இனி இதுபோன்ற குழந்தை மரணங்கள் ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் வாசன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications