உள்ளாட்சி தேர்தல்.. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம்
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1999ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் நாடாளுமன்றம், சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டுக்கு முன்னால் நடைப்பெற்ற தேர்தல்களில் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டு வந்தது.
2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட மோதிரம் சின்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றது.
கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்று 25 இடங்களில் போட்டியிட்டது. குறிப்பாக, காட்டு மன்னார்கோவில் தொகுதியில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்ட கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாதம் அக்டோபர் 17, 19ஆம் நாட்களில் உள்ளாட்சித் தேர்தல்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மீண்டும் மோதிரம் சின்னத்தை ஒதுக்கும்படி கட்சியின் தலைவர் அளித்த மனுவின் அடிப்படையில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மோதிரம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
கடந்த 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பொதுச்சின்னத்தை பெறமுடியாத நிலையிலும் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றிப்பெற்றது.
ஆனால், இம்முறை 'மோதிரம்' என்னும் பொதுச்சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் உரிய முறையில் பயன்படுத்தி, பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டு மென்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் இடம்பெற்றுள்ள மக்கள் நலக் கூட்டணியின் சார்பாக போட்டியிடுகிற வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிப்பெறும் வகையில் களப்பணியாற்ற வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.