வேலூர் சிறையில் பேரறிவாளன் மீது தாக்குதல்: கி.வீரமணி கண்டனம்
சென்னை: வேலூர் சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் அவர்களை சகக் கைதி ஒருவர் தாக்கி, மண்டையில் காயங்களை ஏற்படுத்தியுள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வெட்கத்தையும் அளிக்கும் செய்தி.
சிறையில் உள்ள கைதிக்கும்கூட அங்கேயே பாதுகாப்பில்லை என்றால், நாட்டில் எப்படி சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்று கேள்வி எழுவது நியாயமான ஒன்றே; இதற்காக வெட்கப்பட வேண்டும்.
அவரது பரோலைக் கூட மனிதநேய அடிப்படையில் மறுப்பது எவ்வகையிலும் நியாயமில்லை. தமிழக அரசும், சிறைத் துறை மேல் அதிகாரிகளும் இதுபற்றி விசாரணை நடத்தி, தெளிவாக நியாயமும், பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்.
வன்மையான கண்டனத்திற்குரிய இது போன்ற நிகழ்வுகள் சிறைக்கைதிகளுக்கு ஏற்படாமல் தடுப்பது மிகவும் முக்கியமாகும்.
இவ்வாறு வீரமணி அறிக்கையில் கூறியுள்ளார்.