கந்துவட்டியால் தமிழகம் சவக்காடாகும் நிலைக்கு போகிறது... வேல்முருகன் வேதனை
கந்துவட்டிக் கொடுமையால் தமிழகம் சவக்காடாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் எழுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : கந்துவட்டிக் கொடுமையால் இசக்கி முத்து குடும்பத்தின் தீக்குளிப்புக்குக் காரணமான கந்துவட்டிக்காரர், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : கந்துவட்டிக் கொடுமையால் இசக்கிமுத்து என்பவர் தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே தீக்குளித்த சம்பவம் நடந்திருக்கிறது.
அந்தக் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி போய் பார்வையிட்டிருக்கிறார். கந்துவட்டிக் கொடுமை தொடர்பாக இசக்கிமுத்து குடும்பத்தினர் 5 முறை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் புகார் மனு அளித்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் நடவடிக்கை எடுக்காத பட்சத்திலேயே அவர் இவ்வாறு செய்ததாகத் தெரிகிறது.
ஆனால் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தன்னிடம் மனு கொடுக்கும் முன்பே இசக்கிமுத்து குடும்பத்தினர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டனர்" என்றார். இவ்வாறு கூறிய ஆட்சியர் "கந்துவட்டிக் கொடுமை குறித்து தகவல் தெரிவிக்க அவசர உதவி எண்கள் அறிமுகப்படுத்தப்படும்" என்றும் தெரிவித்தார்.
நமக்கு எழும் சந்தேகம் இதுதான் - இந்த அதிர்ச்சிகர நிகழ்வால் தமிழகம் சவக்காடாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறதோ என்னவோ? இசக்கி முத்து குடும்பத்தின் தீக்குளிப்புக்குக் காரணமாக கந்துவட்டிக்காரர், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்எனவும் அவர்களது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.