குஷ்புவுக்கு பதவி கொடுத்து தப்பில்லை... ஆனா...: விளாசும் விஜயதாரணி
திமுகவுக்கு பிரசாரம் பண்ணியும் அந்த கட்சி தோத்துதானே போச்சு... அப்புறமும் ஏன் அவசரப்பட்டு பதவி கொடுக்கணும். இதுதான் இன்றைக்கு விஜயதாரணி எம்.எல்.ஏ போகும் இடமெல்லாம் கேட்கும் கேள்வியாகி வருகிறது.
வேறு கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்களுக்கு மிகப்பெரிய பதவி கொடுக்கின்றனர். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கவேண்டும் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார் விஜயதாரணி.

எம்.எல்.ஏ விஜயதாரணி
எம்.எல்.ஏவாக சட்டசபைக்கு போனாலும் சரி... டிவியில் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் சரி சும்மா சென்டர் ஆப் த அட்ராக்சன் ஆக இருக்கவேண்டும் என்று நினைப்பார் விஜயதாரணி. அவர் சட்டசபையில் பேசியதை விட டிவி விவாத நிகழ்ச்சிகளில்தான் அதிகம் பேசியிருப்பார்.

என்னடா இது சோதனை
அவருக்கு சோதனையாக திமுகவில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸில் திடீரென இணைந்தார்.

குஷ்புவுக்கு முக்கியத்துவம்
கட்சியில் அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் மேடைகளில் மாநிலத் தலைவருக்கு இணையான முக்கியத்துவம் குஷ்புவுக்கும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக குஷ்பு நியமிக்கப்பட்டார்.

நேற்று வந்தவருக்கு பதவியா?
கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்து வரும் பெண் தலைவர்கள் பலர் இருக்கும்போது கட்சியில் இணைந்ததும் அகில இந்திய அளவில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது பலரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.

தோத்துதானே போச்சு
தேர்தலில் தோல்வியடைந்து காங்கிரஸ் இக்கட்டான நிலையில் இருந்தபோதுதான், குஷ்பு கட்சியில் இணைந்தார். அதை வரவேற்கிறோம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குஷ்பு, நடிகர் வடிவேல் ஆகியோர் திமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தனர். ஆனாலும், அக்கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதையும் மனதில் கொள்ள வேண்டும் என்று போகுற போக்கில் கருத்து கூறி வருகின்றனர் காங்கிரஸ் கட்சியின் மகளிரணியினர்.

கட்சிப்பதவிகள்
விளவங்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.விஜயதரணி, வெளிப்படையாகவே இதனை ஊடகங்களில் தெரிவித்து வருகிறார். மாநிலப் பொதுச்செயலாளர், தேசிய செய்தித் தொடர்பாளர், தேசிய அளவில் பஞ்சாயத்துராஜ் பொறுப்பாளர் என பல பதவிகளை வகித்துவிட்டேன். கடந்த 20 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வருகிறேன். அதனால் மற்றவர்களுக்கு பதவி கிடைத்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

வரவேற்போம்… ஆனாலும்
நடிகை குஷ்பு போன்ற பிரபலமானவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வருவது வரவேற்கத்தக்கது. அவர்களின் பிரச்சாரம் கட்சிக்கும் வலுசேர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நடிகர் எஸ்.வி.சேகர்கூட காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காததால் வேறு கட்சிக்கு சென்றுவிட்டார். எனவே, பிரபலமானவர்களை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அங்கீகாரம் இல்லையே
அதே நேரத்தில் கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்தவர்கள், சொந்த நலனைவிட கட்சி நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள், இளைஞர்கள், பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். அவர்களை கட்சி வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறியுள்ளார் விஜயதாரணி.
டூர் போய்விட்டு வந்த ராகுல்காந்தி காதில் இது விழுந்தால் சரிதான்...












Click it and Unblock the Notifications