யார் சமூக விரோதிகள் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியாதா? நடுக்குப்பத்தில் விஜயகாந்த் பேட்டி
சென்னை நடுக்குப்பம் மீனவர் குடியிருப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று ஆய்வு செய்தார்.
சென்னை: நடுக்குப்பம் கலவரத்தில் யார் தீவரவாதி, யார் சமூக விரோதிகள் என்று காவல் துறை அதிகாரிகளுக்கு தெரியாதா, ஒட்டுமொத்தமாக கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அப்போது போலீசாரால் விரட்டப்பட்ட போராட்டக்காரர்கள், தங்களை காப்பாற்றிக் கொள்ள நடுக்குப்பம் பகுதியில் நுழைந்தனர். அவர்களுக்கு உணவும், பாதுகாப்பும் வழங்கியவர்கள் மீனவர்கள். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் மீனவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர்.
இதனிடையே போலீஸாருக்கும் வன்முறையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது நடுக்குப்பம் மீன் சந்தைக்கு தீ வைக்கப்பட்டது. வீடுகளின் முன்பிருந்த வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. ஆட்டோக்கள், மீன் சந்தை உள்ளிட்டவற்றையும் போலீசார் தீக்கிரையாக்கினர். இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று நடுக்குப்பம் மீனவர் குடியிருப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். வன்முறைக்கு காரணமானவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூகவிரோத கும்பலை காவல்துறையினர் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கலவரத்தில் யார் தீவரவாதி, யார் சமூக விரோதிகள் என்று காவல் துறைக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தெரியாதா, ஒட்டுமொத்தமாக கைது செய்தது கண்டிக்கத்தக்கது. ஜல்லிக்கட்டு வன்முறையில் பொத்தாம் பொதுவாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றார்.