நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து.. போராடியவர்களுக்கு விஷால் வாழ்த்து
Recommended Video

சென்னை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டதற்கு நடிகர் விஷால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். போராடியவர்களுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜெம் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக் கோரியும் விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

நெடுவாசல் மக்களின் போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வந்த நிலையில், அத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையிலுள்ள தேசிய தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.
தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் நடிகர் விஷால் நடத்தி வரும் தேவி அறக்கட்டளை தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டதோடு, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்குமாறு ஜெம் நிறுவனம், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த செய்தி வெளியானதும், விஷால் இன்று டுவிட்டரில் வெளியிட்ட நிலைத்தகவலில், "நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஜெம் லேப்ஸ் நிறுவனம் கைவிட உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
இந்த திட்டத்தை நிறுத்த போராடிய எல்லோருக்கும் வாழ்த்துக்கள். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவன் என்ற முறையில், நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications