6 மணிக்குள்.. இல்லை இல்லை இன்றைக்குள்.. உளறி கொட்டிய ஸ்ரீரங்கம் எம்எல்ஏ வளர்மதி
ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்றைக்குள் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ வளர்மதி கூறியுள்ளார்.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் வைக்கப்பட்டுள்ள அதிமுக பெண் எம்எல்ஏக்கள் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது இன்றைக்குள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமியை அழைப்பார் என்று ஸ்ரீரங்கம் எம்எல்ஏ வளர்மதி நம்பிக்கை தெரிவித்தார்.
கூவத்தூரில் 9 நாட்களாக அதிமுக எம்எல்ஏக்கள் வைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இதற்கிடை பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், பெண் எம்எல்ஏக்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மற்றும் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ வளர்மதி ஆகியோர் பேசியதாவது:

சுதந்திரமாக...
கூவத்தூரில் அனைத்து மருத்துவ வசதி, உணவு வசதி செய்யப்பட்டுள்ளது. எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம். சுதந்திரமாக உள்ளோம். நேற்று எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்துள்ளோம்.
அழைப்பிற்காக...
எடப்பாடி பழனிச்சாமியுடன் 12 அமைச்சர்கள் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு நேற்று சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டுள்ளது. நேற்றே ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்று எண்ணினோம். ஆனால் இன்னும் அழைக்கவில்லை. இன்றும் அழைப்பார் என்று காத்திருக்கிறோம்.
இன்றைக்குள்..
எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்க இன்று மாலை 6 மணிக்குள் ஆளுநர் அழைக்க வேண்டும். இல்லை.. இல்லை.. இன்றைக்குள் அழைப்பார் என்று நினைக்கிறோம். அவர் ஒரு சிறந்த நாடாளுமன்றவாதி.
விசாரணை..
காவல்துறையினர் எங்களிடம் தனிதனியாக விசாரணை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்கு வாய்மொழியாகவும் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளோம்.
திவாகரன் புதியவரல்ல..
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சரோஜா, திவாகரன் புதிதாக கட்சிக்கு வந்தவரில்லை. ஜெயலலிதா இருந்த போதே கட்சிப் பொறுப்புக்களை வகித்தார். ராணுவக் கட்டுப்பாட்டுடன் எங்கள் கட்சி இயங்கி வருகிறது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications