தண்ணீருக்காக தவியாய் தவிக்கும் மக்கள்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்
நெல்லை அருகே கிராம பகுதியில் தண்ணீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
நெல்லை: கடும் வறட்சி நிலவி வருவதால் நெல்லை கிராம பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
நெல்லை சுற்று வட்டார பகுதிகளில் போதிய மழை இல்லாததால் ஆறு, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. கால்நடைகளுக்கு போதிய தீவனம் கிடைக்கவில்லை.

ஆழ்துளை கிணறுகள் வறண்டு போனதாலும் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள உக்கிரன்கோட்டை பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
2 குடிநீர் கிணறுகளும், 7 நீர்தேக்க தொட்டிகளும் உள்ளன. ஆனால் நீர் நிலைகள் வற்றியதால் இந்த தொட்டிகளில் போதிய தண்ணீர் இல்லை. இதனால் தண்ணீர் தேவைக்காக பொதுமக்கள் விவசாய கிணறுகளை தேடி சென்று வருகின்றனர்.
சில தனியார் வாகனங்கள் காட்டு பகுதிக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து ரூ.100 வரை விற்பனை செய்கின்றன. குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில் அதை கண்டுகொள்ளாமல் நிர்வாக அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 2 ஆண்டுகளாக இந்த பகுதியில் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் எங்கள் பகுதியில் உள்ள ஆறுகள், குளங்கள், கிணறுகளில் போதிய தண்ணீர் தற்போது இல்லை. விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணற்றில் உயிரை கையில் பிடித்து கொண்டு தண்ணீர் பிடித்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications