மேட்டூருக்கு நீர் வரத்து குறைகிறது... நீர்மட்டம் 80 அடியாக உயர்வு
சேலம்: மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. அதேசமயம், அணையின் நீர் மட்டம் 80 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகம் மற்றும் கேரளாவின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் கர்நாடகத்தில் உள்ள கபிணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பும் நிலையை எட்டியது.
இதையடுத்து அங்கிருந்து பெருமளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. நேற்று மாலை வரை விநாடிக்கு 40 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 32, 898 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 80 அடியாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து கர்நாடகத்திலிருந்து நல்ல அளவில் தண்ணீர் வந்தால் சில நாட்களில் மேட்டூர் அணை 100 அடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் முழுக் கொள்ளளவு 120 அடியாகும்.