கர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பு... மேட்டூர் அணை நீர்மட்டம் 75 அடியாக உயர்வு
மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளது.
நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 75 அடியாக உள்ளது.பிலிகுண்டுலுவிற்கு விநாடிக்கு 16,000 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
கர்நாடகாவில் கனமழை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் குடகு, மைசூர் மாவட்டங்களில் கன மழை கொட்டி வருகிறது. இதேபோல் கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் பலத்த மழை பெய்து வருவதால் கபிணி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கபிணியில் நீர் திறப்பு
கபிணி அணைக்கு வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணை நிரம்புவதற்கு இன்னும் 5 அடியே உள்ளது. இன்னும் சில தினங்களில் அணை நிரம்பிவிடும் என்பதால் கபிணி அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வீதம் திறந்து விடப்படுகிறது.
கிருஷ்ணராஜசாகர் அணை
இதேபோல் காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டத்திலும் பலத்த மழை கொட்டுவதால் கிருஷ்ண ராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு வினாடிக்கு 28 ஆயிரத்து 240 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 124.8 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் தற்போது 94 அடியாக உள்ளது.
கரை புரண்ட வெள்ளம்
அணைக்கு நீர்வரத்து அதிகளவில் இருப்பதால் அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து மொத்தம் 38 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
ஒகேனக்கல் அருவியில் வெள்ளம்
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல்லுக்கு வியாழக்கிழமை மாலை முதல் வரத்தொடங்கியது. இதையடுத்து காவிரி ஆற்றில் நேற்று காலை 10 ஆயிரத்து 500 கன அடியாக இருந்து நீர்வரத்து நேற்று மாலை 13 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சினிபால்ஸ் அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒகேனக்கல் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
75 அடியான மேட்டூர் அணை
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 13 ஆயிரத்து 326 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர் மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்துள்ளது. நேற்று 74.57 அடியாக இருந்து நீர்மட்டம் இன்று காலை 75.68 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
டெல்டா பாசன விவசாயிகள்
மேட்டூர் அணைக்கு இதே அளவில் நீர்வரத்து நீடித்தால் இன்னும் 2 வாரங்களில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு உள்ளது. மேட்டூர் அணை நிரம்பத் தொடங்கியுள்ளதால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.