"மோடி மன்னிச்சு விட்ருக்காரு.. அமைதியா? போரா? என்பது பாகிஸ்தான் கையில்தான் இருக்கு": அண்ணாமலை
திருப்பூர்: "எங்கு ரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது. நாம் போரை விரும்பவில்லை என்றாலும் போருக்கு தயாராக இருக்கிறோம். பாகிஸ்தானை அந்த நாட்டு மக்களுக்காக பிரதமர் இந்த முறை மன்னித்திருக்கிறார். அமைதியா? போரா? எதை விரும்புகிறது என்பது பாகிஸ்தான் கையில்தான் உள்ளது" எனப் பேசியுள்ளார் அண்ணாமலை.
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, நமது ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடவடிக்கையின் வெற்றியை கொண்டாடும் வகையில் பாஜக சார்பில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மூவர்ண யாத்திரை நடைபெற்றது. திருப்பூரில் நடைபெற்ற யாத்திரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த யாத்திரையைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பாஜகவின் முன்னணி தலைவர்கள் உரையாற்றினர். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், "பக்கத்து நாட்டை நாம் சகோதரர்களாக பார்த்துக் கொண்டு இருந்தாலும் கூட, 1947ல் இருந்து பிரச்சனை மேல் பிரச்சனை செய்து கொண்டு இருக்கிறார்கள். நம் மக்களை படுகொலை செய்கின்றனர், காஷ்மீரில் பயங்கரவாதத்தை வளர்க்கின்றனர்.
எத்தனை முறை நாம் அவர்களுக்கு புத்தி கற்பித்தாலும் கூட, அவர்களுக்கு தெரியவில்லை. நம்முடைய தாக்குதல் என்பது பாகிஸ்தானில் உள்ள அப்பாவிகள் மேல் கிடையாது. போர் நிறுத்தம் என்பது தற்காலிக நிறுத்தம் மட்டும்தான். இன்றில் இருந்து இந்தியாவின் மீது பாகிஸ்தான் நடத்தும் ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலையும் நம் நாடு அதை போராகப் பார்க்க போகிறது.
பாகிஸ்தானுக்கான தண்ணீரை நிறுத்திவிட்டோம். எங்கு ரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது. நாம் போரை விரும்பவில்லை என்றாலும் போருக்கு தயாராக இருக்கிறோம். பாகிஸ்தானை அந்த நாட்டு மக்களுக்காக பிரதமர் இந்த முறை மன்னித்திருக்கிறார். அமைதியா? போரா? எதை விரும்புகிறது என்பது பாகிஸ்தான் கையில்தான் உள்ளது" எனப் பேசியுள்ளார்.
மேலும், இந்த யாத்திரை குறித்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, "திருப்பூரில், பெகல்காம் தாக்குதலுக்கு எதிரொலியாக, நமது ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் பெருவெற்றி பெற்றதைப் பாராட்டும் விதமாகவும், நாட்டைக் காக்கும் பணியில், தங்கள் உயிரைத் தியாகம் செய்த நமது ஐந்து ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், தமிழக பாஜக மாநிலத் தலைவர், அன்பு அண்ணன் நயினார் நாகேந்திரன் தலைமையில், திருப்பூர் குமரன் சிலை முதல் மகாத்மா காந்தி சிலை வரை, தேசியக் கொடி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நமது மக்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எங்கிருந்தாலும், அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளித்திருந்தார். அதன்படியே, நமது வீரம் மிகுந்த ராணுவம், விமானப்படை மூலம், பாகிஸ்தான் நாட்டிற்குள்ளே இருந்த தீவிரவாதிகளின் பதுங்குமிடங்களை எல்லாம் தாக்கி அழித்திருக்கிறது. இந்த ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாட, கட்சி வேறுபாடின்றி, பெருமளவில் பொதுமக்கள் கூடி, நமது ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசப்பற்று இல்லாதவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிடலாம் எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications