அதுக்குத்தான கெளம்பியிருக்கோம்.. நல்லகண்ணு 'நச்' பேச்சு
ஈரோடு: மோடியின் மோசடியை அம்பலப்படுத்தவே கிளம்பியிருக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக் குழு உறுப்பினருமான நல்லகண்ணு கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையில் திருப்பூர் தொகுதி சிபிஐ வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்துப் பிரசாரம் செய்தார் நல்லகண்ணு.
அப்போது அவர் பேசுகையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், ஏற்கனவே ஆண்ட பாரதீய ஜனதா கட்சி இரண்டுமே நிலக்கரி சுரங்க ஊழலில் ஈடுபட்ட கட்சிகள் தான். ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்கிறார்களே தவிர அதை யார் ஒழிப்பது? பா.ஜ.க.வும் காங்கிரசும் ஊழலில் ஊறிய கட்சிகளாக திகழ்ந்து வருகிறது. இனியும் அந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது.
மதவெறியை உருவாக்கும் பாஜக இன்று ஆட்சிக்கு வர துடிக்கிறது. 121 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் பல மதம், பல ஜாதிகள் இருக்கிறது. மோடி வந்தால் நாட்டுக்கு மோட்சம் கிடைக்கும் என்கிறார்கள். அந்த மோசடியை அம்பலம்படுத்தவே நாங்கள் கிளம்பி உள்ளோம்.
தொழிலாளர் நலன், விவசாய நலன் கருதி தமிழ்நாட்டில் ஒரு மாற்று கொள்கையுடன் கம்யூனிஸ்டுகள் வலம் வருகிறது. தமிழ்நாட்டில் மின்சாரம் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் இயற்கையை காப்பாற்றிடவும் விவசாய தொழிலாளர் நலன் காக்கவும் இந்தியாவில் ஜனநாயகம் நிலைத்து நிற்கவும் கம்யூனிஸ்டுகளை பலப்படுத்துங்கள் என்றார் நல்லகண்ணு.