தேனி டூ நீலகிரி.. போலீஸ் பண்ற வேலையா சார் இது.. பையை திறந்ததும்.. ஊட்டி பஸ் ஸ்டாண்டே ஆடிப்போச்சு
ஊட்டி: தேனியில் இருந்து நீலகிரிக்கு கடந்த 4 மாதமாக அரசு பேருந்து மூலம் கஞ்சா கடத்தியது அம்பலத்துக்கு வந்துள்ளது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்ட கதையாக சிக்கியுள்ளார் அந்த போலீஸ்காரர்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி பேருந்து நிலைய பகுதியில் போலீசார் அடிக்கடி ரோந்து சென்று வருவது வழக்கம். அப்படித்தான் அண்மையில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த இளைஞர் பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் தன்னை காவலர் என்று கூறியுள்ளார். எனினும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் விற்பனைக்காக 200 கிராம் கஞ்சா வைத்திருந்தாராம்.

விசாரணையில் அந்த இளைஞர் திண்டுக்கல் மாவட்டம் வெல்வார்பேட்டை முத்தன்கோட்டை பகுதியை சேர்ந்த 29 வயதாகும் சவுந்தரராஜன் என்பதும், இவர கடந்த 2020-ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்து இருப்பதும் தெரியவந்தது. 14-வது பழனி பட்டாலியன் பிரிவில் உள்ள அவர் கோவை மாவட்டம் பில்லூர் அணை பாதுகாப்பு பணியில் இருந்து வந்திருக்கிறார்.
இவர், கடந்த 4 மாதங்களாக தேனியில் இருந்து அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்து நீலகிரியில் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சவுந்தரராஜனை போலீசார் கைது செய்தார்கள். அவர் யாரிடம் கஞ்சா வாங்கினார், அவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான சவுந்தரராஜனை பணியிடை நீக்கம் செய்ய உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
காவலர் சவுந்தரராஜன் கஞ்சா வியாபாரியாக மாறியது எப்படி என்பது குறித்து போலீசார் வெளியிட்ட தகவலை பார்ப்போம். காவலர் சவுந்தரராஜனுக்கு சகோதரர் இருக்கிறார். இவரது தாயார் கீரை வியாபாரம் செய்து வருகிறார். காவலர் சவுந்தரராஜனின் தந்தை இறந்து விட்டார். சிறு வயதிலேயே இவர்களுடைய குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருந்தது.
இதனால் படித்து பெரிய உயரத்திற்கு வர விரும்பிய சவுந்தரராஜன் இன்ஜினீயரிங் படித்து வேலைக்கு சேர்ந்தார். இருப்பினும், எதிர்பார்த்த வருமானம் இல்லை. இதனால் போலீஸ் தேர்வு எழுதி போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். ஆனால் போலீஸ் வேலையிலும் அவருக்கு பெரிய வருமானம் இல்லை.. பில்லூர் அணை பாதுகாவலர் பணியில் இருந்த சவுந்தரராஜன் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைத்தாராம்.
இதனால் காவலர் வேலையை வைத்து சித்து வேலை செய்ய திட்டமிட்டார். இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தேனி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா பயிரிடப்பட்டு, பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவது நடக்கிறதாம். இதில் சிலர் மற்றவர்கள் வாகன சோதனையில் சிக்கி கொள்வார்கள். ஆனால், போலீஸ் உடையில் இருப்பதால் எளிதாக கஞ்சா கடத்தலாம் என்று நினைத்த காவலர் இந்த வழியை தேர்வு செய்தாராம். சவுந்தரராஜன் மொத்த விலைக்கு கஞ்சா வாங்கி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து இருக்கலாம் என்று கூறப்படுவதால் தீவிர விசாரணை நடந்து வருகிறது












Click it and Unblock the Notifications