எனக்கு அழகிரியும், ஸ்டாலினும் ஒன்று தான்: வைகோ
மதுரை: திமுக பொதுச் செயலாளர் ஸ்டாலினும், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியும் தனக்கு ஒன்று தான் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அவரது கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எனக்கு சிறு வயதில் இருந்தே முத்துராமலிங்கத் தேவர் மீது ஈர்ப்பு உண்டு. அவர் மீது உள்ள மரியாதையால் நான் கடந்த 39 ஆண்டுகளாக தேவர் ஜெயந்தி அன்று பசும்பொன் சென்று மரியாதை செலுத்தி வருகிறேன். நான் சிறையில் இருந்த ஆண்டுகளில் மட்டும் தான் பசும்பொன் செல்லவில்லை. தேர்தல் கூட்டணி பற்றி கருணாநிதி மிகவும் அன்பாக பேசியது மகிழ்ச்சியாக உள்ளது.
லோக்சபா தேர்தல் சமயத்தில் நான் மதுரையில் வைத்து அழகிரியை சந்தித்து பேசினேன். அப்போது ஏற்பட்ட அதே மகிழ்ச்சி தற்போது ஸ்டாலினை சந்தித்தபோதும் ஏற்பட்டது. எனக்கு அழகிரியும், ஸ்டாலினும் ஒன்று தான். கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் தான் பேச வேண்டும் என்றார்.