மாட்டிறைச்சி தடைக்கு எதிராக கேரளா போல தமிழக சட்டசபையிலும் தீர்மானம் வருமா?
மாட்டிறைச்சிக்கான தடையை எதிர்த்து கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போல தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: கேரள சட்டசபையில் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்டது போல தமிழகத்தில் கூட உள்ள சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த மே 23-ம் தேதி பசு, காளை, எருமை மாடுகள், ஒட்டகங்கள் ஆகியவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் வாங்கவோ விற்கவோ கூடாது என்று புதிய உத்தரவை மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்தது.
இது நாடெங்கும் எதிர்ப்பலைகளைக் கிளப்பியது. குறிப்பாக கேரள மாநிலம் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ஜூன் 8ம் தேதி கேரள சட்டப்பேரவையில் சிறப்புக்கூட்டம் கூட்டப்பட்டு மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒருமித்த ஆதரவு
இந்தத் தீர்மானத்தை ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியும் எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஏகமனதாக ஆதரித்தன. கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்டோர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

பீப் ருசித்த எம்எல்ஏக்கள்
கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு விதித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கேரள நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்தது. இந்நிலையில் சிறப்பு சட்டசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, கூட்டத்தொடருக்கு முன்னதாக சட்டசபை கேன்டீனில் மாட்டுக்கறி ரோஸ்ட்டும் பரிமாறப்பட்டது, இதனை எம்எல்ஏக்கள் ருசித்து சென்றனர்.

மாணவர்கள் போராட்டம்
தமிழகத்திலும் மாட்டிறைச்சி தடையை எதிர்த்து பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தினர். ஐஐடி வளாகத்தில் மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்தியதால் சூரஜ் என்ற மாணவர் தாக்கப்பட்டு, அதற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்களின் போராட்டமம் நடத்தப்பட்டது.

எல்லாரும் சொல்லிட்டாங்க
மத்திய அரசின் அறிவிப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தமிழக அரசு மட்டும் வாய்மூடி மௌனியாகவே இருக்கிறது. மத்திய அரசின் முழு அறிவிப்பையும் படித்து விட்டு கருத்து தெரிவிப்பதாக சொன்ன முதல்வர் பழனிசாமி அரசு இதுவரை எந்த கருத்தையும் கூறவில்லை.

வருமா சிறப்பு தீர்மானம்
தனி மனித உணவு உரிமையில் தலையிடும் விவகாரம் என்று அனைத்து கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்த வாரம் அதாவது ஜூன் 14ம் தேதி தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது குறித்து அரசு வாய்திறக்குமா என்று போராட்டக்காரர்கள் எதிர்பார்க்கின்றனர். தேவைப்படும் பட்சத்தில் அண்டை மாநிலமான கேரளா போல தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications