சந்திக்க மறுத்த முதல்வர்... நள்ளிரவில் ராஜினாமா செய்த டிஜிபி அசோக்குமார்- பரபர பின்னணி!
சென்னை: தமிழக டிஜிபி அசோக்குமார் திடீரென்று ஓய்வை அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா சந்திக்க மறுத்ததால் அவர் விருப்ப ஓய்வு அறிவித்ததாக கூறப்படுகிறது.
சக அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாதது, குற்றங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பது ஆகியவையே இந்த ராஜினாமாவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தானாக முன்வந்து ராஜினாமா செய்வதாக அவர் கூறியதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை இந்த கடிதத்தின் மீதான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து அவர் புதன்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.
1982ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்கு தேர்வான அசோக்குமார், தமிழக காவல்துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்தார். 2013ம் ஆண்டுக்கு முன்பு வரை மத்திய அரசின் பணியாக சிபிஐயின் தெற்கு மண்டல இணை இயக்குநராக இருந்த அவர் தமிழக அரசு பணிக்கு திரும்பிய பிறகு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று பொருளாதார தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்தார். பின்னர் உளவுத்துறைக்கு மாற்றப்பட்ட அவர், அதே துறையில் டிஜிபியாகவும் பதவி உயர்வு பெற்றார்.
2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெறுவதாக இருந்த நிலையில் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. பணிக்காலம் முடிவடைய இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், விருப்ப ஓய்வு பெற விரும்புவதாக கேட்டுக்கொண்டதன் பேரில் அசோக்குமாரை தமிழக அரசு விடுவித்துள்ளது.
தனக்கு தனிப்பட்ட பணிகள் இருக்கும் காரணத்தினாலேயே ராஜினாமா கடிதத்தை அளித்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அரசு ஏற்றிருப்பதாகவும், பணிக்காலத்தில் சிறப்பாக பணியாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெயலலிதா அதிருப்தி
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட விவகாரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று பிற்பகலில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் எல்லைப்பகுதிகளின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்து உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மாவிடம் சில தகவல்களை முதல்வர் கேட்டுள்ளார். மேலும், டிஜிபி அசோக்குமார் செயல்பாடு குறித்து முதல்வர் ஜெயலலிதா அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அசோக்குமார் அவசரம்
பின்னர், முதல்வரின் அதிருப்தி குறித்து அசோக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் உடனடியாக பிற்பகலில் தலைமைச் செயலகம் சென்றார். ஆனால், அதற்குள் முதல்வர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் முதல்வரை அசோக்குமார் சந்திக்க முடியாமல் போனது. தலைமைச் செயலாளர் ராமமோகனராவ், உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா ஆகியோரை சந்தித்தார்.

கோபத்தில் முதல்வர்
முதல்வரின் அதிருப்தி குறித்து இருவரும் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். முதல்வர், உங்கள் மீது கோபமாக இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த அசோக்குமார், ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. முதல்வருக்கு பிடிக்கவில்லை என்றால் நான் ராஜினாமா செய்கிறேன்' என்று கூறிவிட்டு தனது அலுவலகத்துக்குச் சென்று விட்டார்.

நள்ளிரவில் ராஜினாமா
அவர் ராஜினாமா செய்ய விரும்புவதாக தகவல் முதல்வரின் கவனத்துக்கு நேற்றிரவு கொண்டு செல்லப்பட்டது. அதற்கு முதல்வர் உடனே ஓ.கே. சொல்லியிருக்கிறார். இந்த தகவல் அசோக்குமாருக்கு தெரிவிக்கப்படவே, இரவே விருப்ப ஓய்வு கடிதத்தை உள்துறைச் செயலாளரிடம் வழங்கினார். நள்ளிரவு 12 மணி வரை அலுவலகத்தில் இருந்த டிஜிபி அசோக்குமார், தனது உடமைகளை எடுத்து கொண்டு நள்ளிரவில் வீட்டுக்கு சென்றார்.

டி.கே.ராஜேந்திரன்
அசோக்குமார் திடீரென்று விலகியதால் உடனடியாக புதிய டிஜிபியை நியமிக்க முடியவில்லை. இதனால், டிஜிபி பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்காமல் அசோக்குமார் தானே விடுவித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர நகர போலீஸ் கமிஷனராக இருக்கும் டி.கே.ராஜேந்திரனை, உளவுத்துறை டிஜிபியாக நியமித்து விட்டு, சட்டம் ஒழுங்கு பொறுப்பை கூடுதலாக கவனிக்கும் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் பரபரப்பு
ஏற்கனவே முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் உள்ளிட்ட 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் பணிகாலம் முடிய 2 மாதங்கள் உள்ள நிலையில் முன்கூட்டியே அசோக்குமாரின் ராஜினாமா கடிதம் அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபைத் தேர்தலின் போது அவர் திமுகவுக்கு ஆதரவாக இருந்ததாக புகார் எழுந்ததாகவும் கூறப்படுகிறது.

டி.கே.ராஜேந்திரனுக்கு வாய்ப்பு
2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி ராமானுஜம் ஓய்வு பெற்றார். அதே தேதியில் அசோக்குமார் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். டிஜிபியாக இருப்பவர் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி 2 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்று அரசு அரசாணை பிறப்பித்திருப்பதால், வருகிற நவம்பர் 3ம் தேதி வரை அவர் டிஜிபியாக பதவி வகிக்கலாம். ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் விருப்ப ஓய்வு பெற்று விட்டார். புதிய அரசாணைப்படி முதல்முறையாக ஓய்வு பெற்ற பின்னரும் ராமானுஜம் 2 ஆண்டுகள் பதவியில் இருந்தார். அசோக்குமார் மூன்று மாதம் முன்னதாகவே விருப்ப ஓய்வில் சென்று விட்டார். டி.கே.ராஜேந்திரன், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டாலும் அவர் 2 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications