பணம் பதுக்கப்பட்டும் சிறிதாவூர் பங்களாவில் ஏன் சோதனை செய்யப்படவில்லை?: வைகோ
காஞ்சிபுரம்: சிறிதாவூர் பங்களாவில் பணம் உள்ளது என்று புகார் தெரிவித்தும் தேர்தல் ஆணையம் ஏன் சோதனை செய்யவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமண்டூரில் வரும் 10ம் தேதி தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி மாநாடு நடக்க உள்ளது. அதற்கான பணிகள் அங்கு நடந்து வருகிறது. மாநாட்டு பணிகளை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டனர்.
அப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின்போது அவர் கூறுகையில்,
ஜெயலலிதா தங்கும் சிறிதாவூர் பங்களாவுக்கு இரண்டு கண்டெய்னர் லாரிகள் மற்றும் 10 லாரிகளில் கொண்டு செல்லப்பட்டது பணம் என்று நான் கூறியதற்கு வழக்கு தொடர்ந்துள்ளனர். பணம் குறித்து மாவட்ட கலெக்டர், எஸ்.பி.யிடம் அறிக்கை கேட்டோம்.
சிறிதாவூர் பங்களாவில் ஒன்றும் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேர்தல் ஆணையத்தாலேயே பணப் பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்பது தெரிகிறது.
பங்களாவில் ஏன் சோதனை செய்யவில்லை. பணம் இருந்ததால் தான் நீங்கள் சோதனை செய்யவில்லையா என்றார்.