இரட்டை இலை சின்னம் ஒதுக்கிய அடுத்த நாளே ஆர்கே நகர் தேர்தல் தேதி அறிவிப்பு.. எல்லாமே மர்மமாய் இருக்கு
Recommended Video

சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மதுசூதனன் அணியினருக்கு ஒதுக்கப்பட்ட மறுநாளே ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி உறுப்பினரான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மறைந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
ஒரு தொகுதி காலியானால் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே விதிமுறை. ஆனால் அப்படி நடக்கவில்லை.

தேர்தல் ரத்து
கடந்த பிப்ரவரி மாதம் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிட்டது. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்காளர்களுக்கு அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் போட்டியிட்ட தினகரன் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலை தலைமை தேர்தல் கமிஷன் ரத்து செய்தது.

போலி வாக்காளர்கள்
இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று ரமேஷ் என்பவர் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.கே.நகரில் டிசம்பர் 31ம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த தொகுதியில் போலி வாக்காளர்கள் அதிகம் பேர் இடம் பெற்றுள்ளனர். போலி வாக்காளர்களை நீக்கிய பிறகே ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

டிசம்பபர் 31ம் தேதி கெடு
அதேபோல, ஓட்டுக்காக பணம் கொடுத்தவர்கள் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேசும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் மக்கள் பிரதிநிதி இல்லாமல் ஒரு தொகுதியை ஓராண்டாக காலியாக வைக்க முடியாது என்பதால் டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

திடீரென தீர்ப்பு
இந்த நிலையில்தான், திடீரென நேற்று, தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தீர்ப்பை வெளியிட்டது. மதுசூதனன் தலைமையிலான அணியினருக்குதான் இரட்டை இலை சின்னம் என அறிவிக்கப்பட்டது. அதிமுகவினர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட நிலையில், சூட்டோடு சூடாக இன்று ஆர்கே நகர் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

மர்மமோ மர்மம்
டிசம்பர் 21ம் தேதி ஆர்.கே.நகருக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது, இன்னும் ஒரு மாதத்திற்குள் தேர்தல் நடைபெற உள்ளது. இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டுள்ளதாக தினகரன் அணியினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி அணிக்கு கொடுத்த கையோடு, ஆர்.கே.நகருக்கு தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது மர்மமாகத்தான் உள்ளது. இன்னும் ஜெயலலிதா மரணத்தின் மர்மமே தீராத நிலையில், அத்தோடு இதுவும் ஒரு மர்மமாகிவிட்டது.












Click it and Unblock the Notifications