ஓ.பன்னீர் செல்வத்தின் அதிகாரப்பூர்வ படம் இன்னும் தரவில்லையாம்.. அதான் ஜெ. படம் தொடர்கிறதாம்!
சென்னை: அரசு அலுவலகங்களில் இன்னும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் தொடர்வது குறித்து அரசு அதிகாரிகள் தரப்பில் நூதனமான ஒரு விளக்கம் கூறப்படுகிறது.
அதாவது முதல்வரின் அதிகாரப்பூர்வ படத்தை தலைமைச் செயலாளர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைப்பார்களாம். அதைத்தான் அரசு அலுவலகங்களில் பயன்படுத்த முடியுமாம்.
ஆனால் இதுவரை ஓ.பன்னீர் செல்வத்தின் அதிகாரப்பூர்வ படம் அரசு அலுவலகங்களுக்குப் போகவில்லையாம். இதனால்தான் அவரது படத்தை இன்னும் வைக்காமல் உள்ளனராம். ஜெயலலிதா படமே தொடர்கிறதாம்.

ராமதாஸ் கடும் எதிர்ப்பு
ஊழல் வழக்கில் சிறைக்குப் போய் விட்ட பின்னரும் ஜெயலலிதாவின் படம் ஏன் இன்னும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அலுவலகத்திலும், பிற அரசு அலுவலகங்களிலும் தொடர்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

உடனே தூக்குங்க - விஜயகாந்த்தும் கோரிக்கை
இதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் கூட ஜெயலலிதா படத்தை உடனடியாக அகற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் அது கஷ்டமாச்சே...!
ஆனால் போட்டோவை மாற்றுவது ரொம்பக் கஷ்டம் என்று அரசு அதிகாரிகள் தரப்பில் புது விளக்கம் அளிக்கப்படுகிறது.

இஷ்டத்துக்கு வைக்க முடியாதே
முதல்வர் படம் என்பது அரசு தரும் அதிகாரப்பூர்வ படமாக மட்டுமே இருக்க முடியும். நம் இஷ்டத்திற்கு எந்தப் போட்டோவையும் வைக்க முடியாது.

தலைமைச் செயலாளர்தான் போட்டோ தர வேண்டும்
தலைமைச் செயலாளர் அலுவலகத்திலிருந்து இதுதான் முதல்வரின் அதிகாரப்பூர்வ படம் என்று கொடுப்பார்கள். அதைத்தான் வைக்க முடியும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இதுவரை படம் வரவில்லை
தற்போது முதல்வராகியுள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் அதிகாரப்பூர்வ படம் இதுவரை அரசு அலுவலகங்களுக்கு அனுப்பபடவில்லையாம். இதனால்தான் அவரது படத்தை வைக்காமல் உள்ளனராம்.

எடுக்கனும்னா கூட ஜி.ஓ. வரணும்
அதேபோல ஏற்கனவே வைத்துள்ள படத்தை நீக்கவும் கூட அரசு உத்தரவு வர வேண்டுமாம். அந்த உத்தரவும் இதுவரை போகவில்லையாம்.

போட்டோ எடுக்க ஆள் கிடைக்கலையோ...!
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அதிகாரப்பூர்வ படத்தை இன்னுமா எடுக்காமல் உள்ளனர். ஒரு வேளை போட்டோ எடுக்க கேமராமேன் கிடைக்கலையோ என்னமோ...!












Click it and Unblock the Notifications