இரண்டாவது முறையாக ஜெ. உடல்நிலை பற்றி அறிய அப்பல்லோ சென்ற பொறுப்பு ஆளுநர்.. பின்னணி என்ன?
சென்னை: அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று மீண்டும் ஒருமுறை, நேரில் சென்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்து திரும்பியுள்ளார், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
கடந்த 1ம் தேதிக்கு பிறகு 2வது முறையாக இன்று ஒருமுறை அப்பல்லோவுக்கு விசிட் அடித்துள்ளார் வித்யாசாகர் ராவ். இரண்டுமே மாறுபட்ட சூழல்களில் நடந்த நிகழ்வுகள்.
1ம் தேதி ஆளுநர், அப்பல்லோ சென்றபோது முதல்வர் உடல் நிலை குறித்து வதந்திகள் காட்டுத்தீயாய் பரவிய காலம். யாராவது சென்று உண்மையை வெளியே சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களின் மூச்சை முட்டிக்கொண்டிருந்த காலகட்டம் அது. வித்யாசாகர் ராவ் நேரில் சென்று டாக்டர்களிடம் விசாரித்துவிட்டு, ஜெயலலிதா நலமாக உள்ளார் என அறிக்கை வெளியிட்ட பிறகே வதந்திகளுக்கு ஓய்வு கிடைத்தது.
இன்று நடைபெற்ற சந்திப்பு இன்னொரு சூழலில் நிகழ்ந்துள்ளது. முதல்வர் உடல்நலம் தேறிவிட்டார், பிறருடன் உரையாட ஆரம்பித்துள்ளார் என அப்பல்லோ நேற்று இரவு அறிக்கை வெளியிட்ட பின்னணியில் இந்த வருகை நிகழ்ந்துள்ளது.
ஆளுநர் இன்று அவசரமாக வருகை தர இரு காரணங்கள் கூறப்படுகிறது. ஜெயலலிதா உடல்நலம் தேறி பேச ஆரம்பித்துவிட்டார் என்பதை நேரில் உறுதி செய்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அறிக்கை அளிக்க வேண்டிய கட்டாயம் ஒரு காரணம்.
பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்ட முதல்வரின் துறைகளை மீண்டும் ஜெயலலிதாவே நிர்வகிக்க முடியுமா என்பதை அறிந்து கொள்ள வேண்டியது மற்றொரு காரணம்.
ஆளுநர் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில், பிரதமர் மோடி, சென்னை வந்து முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவின் வெங்கய்ய நாயுடு, அருண் ஜேட்லி, அமித்ஷா, பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் அப்பல்லோவுக்கு வருகை தந்திருந்தபோதிலும், ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க முடியவில்லை. ஜெயலலிதா உடல்நலம் அதற்கு அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், ஜெயலலிதா உரையாட ஆரம்பித்துள்ளதை உறுதி செய்த பிறகு மோடி அவரை சந்திக்க நேரில் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதை இன்று நேரில் சென்று உறுதி செய்துள்ளார்.