மாட்டிறைச்சி விவகாரம்.. கொந்தளிக்கும் கேரளா முதல்வர்.. ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!
மாட்டிறைச்சி அரசியலால் தமிழகம் போராட்டக் களமாகியுள்ளது ஆனால் மாநில அரசு வாய்மூடி மவுனியாய் நிற்கிறது.
சென்னை: தமிழகத்தை போராட்டக் களமாக்கியிருக்கும் மாட்டிறைச்சி அரசியல் குறித்து தமிழக அரசு எதுவும் பேசாமல் வாயை மூடி மவுனமாக இருப்பது மக்களை எரிச்சலடைய வைத்துள்ளது.
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது. அரசின் இந்த திடீர் அறிவிப்பால் தமிழகம் முழுவதும் சாலைகளில் மாட்டுக்கறி சமைத்து சாப்பிடும் போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கில் இந்த மிருகவதை தடை சட்டத்தை அமல்படுத்த 4 வாரங்கள் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவு என்பது மக்களின் உரிமை, அதில் அரசு தலையிட முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மத்திய அரசின் இந்த சட்டம் மாநிலத்திற்கு பொருந்துமா என்று விளக்கமளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கூட்டறிக்கை
2017 பசுவதை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி திமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சியினர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். மத்திய அரசின் முடிவு ஒற்றை கலாசாரத்தை திணிக்கும் பண்பாட்டு சர்வாதிகாரம். எதை உண்ண வேண்டும் என்பதை நிர்ணயிக்க அரசுக்கு யார் அதிகாரம் அளித்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பட்டும் படாமல் எதிர்ப்பு
அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் பொதுச்செயலாளர் ஓ.பன்னீர்செல்வமும் மாட்டிறைச்சி தடைக்கு எதிரான தனது நிலைப்பாட்டை பட்டும் படாமல் தெரிவித்துள்ளார். மக்களின் போராட்டங்களை எதிர்ப்புகள் என்று கருதாமல், மக்களின் உணர்வுகள் என்று கருதி, கால்நடைச் சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்று பிறப்பித்த தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தனிச்சட்டம்
மத்திய அரசின் மாட்டிறைச்சி தடைக்கு அண்டை மாநிலமான புதுச்சேரி அரசும் கூட வாய் திறந்து கருத்து கூறியுள்ளது. அரசின் இந்த சட்டத்தை ஏற்க முடியாது என்பதோடு தேவைப்பட்டால் தனிச்சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். இத்தனைக்கும் புதுச்சேரி மாநிலம், மத்திய அரசை முழுமையாக நம்பியிருக்கும் யூனியன் பிரதேசமாகும்.

கொடூர தாக்குதல்
மாட்டிறைச்சி தடைக்கு எதிராக சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் விழாவை மாணவர்கள் நடத்தினர். இதில் பங்கேற்ற சுராஜ் என்ற மாணவரை சக மாணவர்கள் நேற்று கடுமையாக தாக்கியுள்ளனர். மாணவர்கள் மத்தியில் இந்த தாக்குதல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.
|
விஜயன் அட்வைஸ்
மாணவர் சுராஜ் தாக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார். தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அட்வைசும் செய்துள்ளார். ஆனால் நம்ம தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா?

இதுவரை வாயே திறக்கவில்லை
மாட்டிறைச்சி தடைக்கு எதிராக இதுவரை எடப்பாடி வாயே திறக்கவில்லை. கேட்டால் தீர்ப்பைப் படித்துப் பார்த்து விட்டுத்தான் பேசுவேன் என்று கூறினார். கல்லூரி வளாகத்தில் போராட்ட, வீதிகளில் போராட்டம் என மாட்டிறைச்சி அரசியலால் தமிழகம் போராட்ட களமாகியுள்ளது. ஆனால் இந்த தடைக்கு தமிழக அரசு இன்னும் வாய் திறந்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவேயில்லை.

ஜகா வாங்கிய முதல்வர்
2001 - 2006 ஆட்சி காலத்தில் கோவில்களில் ஆடு, மாடு பலியிடுவதை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தடை செய்தார். அதற்கு எதிர்ப்பு கிளம்பிதால், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அந்தத் தடை திரும்பப் பெறப்பட்டது என்பது நினைவிருக்கலாம். இதுவரை தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவேயில்லை, அரசாணையை படிக்க இத்தனை நாட்களா என்று மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் எடப்பாடி அரசு திகைத்து நிற்பதாக பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசு கருத்து சொல்ல மட்டும் அவசரப்படுமா என்ன!












Click it and Unblock the Notifications